பீகார் தேர்தல்: முதல் கட்டமாக 71 தொகுதிகளில் தேர்தல்- அத்தனை கட்சிகளுக்கும் காத்திருக்கும் சவால்
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 71 தொகுதிகளுமே அத்தனை கட்சிகளுக்கும் சவாலானவைதான்.
பீகாரில் அக்டோபர் 28-ல் முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 2015 சட்டசபை தேர்தலில் இந்த 71 தொகுதிகளில் அப்போதைய ஆர்ஜேடி-ஜேடியூ கூட்டணி 54 இடங்களைக் கைப்பற்றி இருந்தது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 15 தொகுதிகளில்தான் வென்றது. ஆனால் தற்போது கூட்டணிகள் அத்தனையும் தலைகீழாக மாறி இருக்கின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜேடியூ இடம்பெற்றுள்ளது.
சூடு பிடித்த பீகார் தேர்தல்.. காங்கிரஸ், ஜெடியு வேட்பாளர் பட்டியல் வெளியீடு..இன்று வேட்புமனு தாக்கல்
ஆர்ஜேடி-காங்-இடதுசாரிகள்
ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்திருக்கின்றன. இந்த 71 தொகுதிகளில் 2015-ல் ஆர்ஜேடி மொத்தம் 29 தொகுதிகளில் போட்டியிட்டு 27ஐ கைப்பற்றியது. இதே 71 தொகுதிகளில் தற்போது காங்கிரஸ்- இடதுசாரிகள் 43 இடங்களில் போட்டியிடுகின்றன.
2015 தேர்தல் முடிவுகள்
இங்கு 2015-ல் காங்கிரஸ் கட்சி 13 தொகுதிகளில் போட்டியிட்டு 9-ல் வெற்றி பெற்றிருந்தது. இம்முறை காங்கிரஸ் 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கடந்த முறை 1 தொகுதியில் வென்ற இடதுசாரிகள் இப்போது 7 இடங்களில் போட்டியிடுகிறது.
பாஜகவுக்கு மீண்டும் வெற்றி கிடைக்குமா?
இன்னொரு பக்கம் 2105 தேர்தலில் பாஜக இந்த 71-ல் 40 தொகுதிகளில் போட்டியிட்டு 13-ல் வென்றது. இப்போது 29 தொகுதிகளில் பாஜகவும் 35 தொகுதிகளில் ஜேடியூவும் போட்டியிடுகின்றன. ஜேடியூ கடந்த முறை இங்கு 28-ல் போட்டியிட்டு 18-ல் வென்றது.
கட்சிகள் மும்முர போராட்டம்
பாஜக கூட்டணியில் திடீரென இணைந்த முன்னாள் முதல்வர் மாஞ்சி கட்சி இந்த 71-ல் 6 தொகுதிகளில் இம்முறை களம் காண்கிறது. இதேபோல் இம்முறை ராம்விலாஸ் பாஸ்வானின் லோக்ஜனசக்தி கட்சி, ஆர்.எல்.எஸ்.பி ஆகியவை தனித்தனியே போட்டியிடுகின்றன. கடந்த 2015 தேர்தலில் பெற்ற வெற்றியை அத்தனை கட்சிகளும் இம்முறையும் பெறுவதற்கு பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றன. இதனால் 71 தொகுதி தேர்தல் முடிவுகளும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.