"இத்தனை கேஸ் முடிக்காம இருக்கீங்க.. போங்கய்யா உள்ளே" போலீஸாரை லாக் அப்பில் தள்ளிய அதிரடி எஸ்பி
பாட்னா: பீகாரில் ஒழுங்காக பணி செய்யாமல், பல ஆண்டுகளாக வழக்குகளை முடிக்காமல் வைத்திருந்த 5 போலீஸாரை எஸ்.பி. ஒருவர் லாக்-அப்பில் அடைத்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
பீகார் மாநிலம் நவாடா மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிபவர் கவுரவ் மங்லா. மிகவும் கறார் பேர்வழி எனக் கூறப்படும் இவர், நவாடா மாவட்ட எஸ்.பி.யாக சில மாதங்களுக்கு முன்புதான் பதவியேற்றார்.
அவர் பதவியேற்ற நாள் முதலாக தனது எல்லைக்கு உடபட்ட காவல் நிலையங்களில் அதிரடியாக சென்று ஆய்வு செய்வதையும், பணியில் அலட்சியமாக இருக்கும் போலீஸார் மீது நடவடிக்கை எடுப்பதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், கடந்த 8-ம் தேதி இரவு நவாடா நகர காவல் நிலையத்திற்கு எஸ்.பி. கவுரவ் மங்லா சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சப் இனஸ்பெக்டர் சத்ருகன் பாஸ்வான் உள்ளிட்ட சிலர் நன்றாக படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். இதை பார்த்ததுமே அவருக்கு ஆத்திரம் வந்தது.
பிறகு அங்கிருந்த போலீஸாரை அவர் எழுப்பி இருக்கிறார். வந்திருப்பது எஸ்பி எனத் தெரிந்ததும் அவர்கள் பதறி போய் எழுந்தனர். இதையடுத்து, அவர் அங்கிருந்த வழக்கு புத்தத்தை எடுத்து பார்த்துள்ளார். அப்போது அந்த காவல் சரகத்தில் பதிவாகி இருந்த பெரும்பாலான வழக்குகள் முடிக்கப்படாமல் அப்படியே நிலுவையில் இருந்தது தெரியவந்தது.

இதனால் கொதித்தெழுந்த எஸ்பி கவுரவ் மங்லா, அங்கிருந்த போலீஸாரை சரமாரியாக திட்டி தீர்த்தார். ஆனாலும் அவருக்கு கோபம் அடங்கவில்லை. இதனைத் தொடர்ந்து, சப் இன்ஸ்பெக்டர்கள் சத்ருகன் பஸ்வான், ராம்ரேகா சிங், உதவி சப் இன்ஸ்பெக்டர்கள் சந்தோஷ் பவன், சஞ்சய் சிங், ராமேஷ்வர் உரான் ஆகிய 5 பேரையும் காவல் நிலையத்தில் இருந்த லாக்-அப்பில் தள்ளி கதவை பூட்டினார்.
லாக் - அப்பில் சென்ற போலீஸார், கைதிகளை போல தங்களை விடுவித்து விடுமாறு எஸ்பியிடம் கெஞ்சினர். ஆனால் அவரோ, இவர்கள் கெஞ்சுவதை சிறிதும் காதுக்குள் போட்டுக்கொள்ளாமல் தனது அலுவலகத்திற்கு கிளம்பினார்.
பின்னர் அதிகாலை ஒரு காவலரை அனுப்பி அவர்களை அனைவரையும் லாக்-அப்பில் இருந்து விடுவித்தார்.
இந்நிலையில், போலீஸாரை எஸ்பி லாக்-அப்பில் அடைத்த சிசிடிவி காட்சிகள் நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதில் எஸ்பிக்கு பொதுமக்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதனிடையே, இதுகுறித்து எஸ்பி கவுரவ் மங்லாவிடம் கேட்ட போது, "அதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை" என்றார்.
ஆனால், எஸ்பி பொய் கூறுகிறார் என்றும், அவர் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தி நடவடிககை எடுக்க வேண்டும் எனவும் பீகார் போலீஸ் காவலர் சங்கத் தலைவர் மிருத்யுஞ்சய் குமார் சிங் கூறினார்.












Click it and Unblock the Notifications