நுபுர் சர்மாவின் வீடியோ பார்த்த இளைஞருக்கு கத்திக்குத்து.. பீகாரில் நடந்த கொடூர சம்பவம்
பாட்னா: இஸ்லாமிய இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவின் வீடியோவை பார்த்த பீகார் இளைஞரை ஒரு கும்பல் கத்தியால் குத்திய கொடூர சம்பவம் நடந்துள்ளது.
பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்தவர் நுபுர் சர்மா. இவர் மே மாதம் இறுதியில் தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றார்.
அப்போது அவர் இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நுபுர் சர்மா பேசினார்.
நபிகள் நாயகம் சர்ச்சை- நுபுர் சர்மாவை ஆக.10 வரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
நுபுர் சர்மா கைதுக்கு இடைக்கால தடை
இதையடுத்து அவர் பாஜகவின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வெளிநாடுகள் மற்றும் இந்தியாவில் நுபுர் சர்மாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பான புகாரால் அவர் மீது பல போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் நுபுர் சர்மாவை கைது செய்ய இடைக்கால தடையை உச்சநீதிமன்றம் இன்று விதித்துள்ளது. இருப்பினும் நுபுர் சர்மா பேச்சு தொடர்பான மோதல்கள் அவ்வப்போது நடந்து வருகிறது.
நுபுர் சர்மா வீடியோ பார்த்த இளைஞர்
இந்நிலையில் தான் தற்போது நுபுர் சர்மா விவகாரம் தொடர்பாக பீகாரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதன் விபரம் வருமாறு: பீகார் மாநிலம் சீதாமர்கி மாவட்டம் பகீரா கிராமத்தை சேர்ந்தவர் அங்கித் ஷா (வயது 23). இவர் தொலைக்காட்சி விவாதத்தில் நுபுர் சர்மா பேசிய வீடியோவை பார்த்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த 4 பேர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் முற்றவே அந்த கும்பல்அவரை தாக்கியது.
கத்திக்குத்து
மேலும் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கத்தியால் அங்கித் ஷாவை 6 முறை சரமாரியாக குத்தினர். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதையடுத்து 4 பேரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். இதையடுத்து அங்கித் ஷாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
2 பேர் கைது
இதுபற்றி அங்கித் ஷா, ‛‛நான் பான் கடையில் நின்ற பாஜக பிரமுகரின் பேச்சை வீடியோவில் பார்த்து கொண்டிருந்தேன். அப்போது முகமது பிலால் உள்பட 4 பேர் தாக்கி கத்தியால் குத்திவிட்டு சென்றனர்'' என கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் சார்பில் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.
போலீஸ் மறுப்பு
இதுபற்றி டிஎஸ்பி வினோத் குமார் கூறுகையில், ‛‛பான் கடையில் பான் சாப்பிட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே தான் கத்திக்குத்து நடந்துள்ளது'' என்றார். இதுதொடர்பாக அங்கித் ஷாவின் தந்தை மனோஜ் ஷா கூறுகையில், ‛‛என் மகனை 6 முறை கத்தியால் கத்தியுள்ளார். அவர் மீது தாக்கதல் நடத்தியவர்கள் அனைவரும் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர். அவர்களுக்கும், எனது மகனுக்கும் எந்த தனிப்பட்ட வெறுப்பும் இல்லை. சொல்லப்போனால் அவர்களை என் மகன் அறிந்து வைத்திருக்கவில்லை. ஆனால் தாக்குதல் நடத்தியவர்களை பார்த்தால் அடையாளம் காட்டிவிடுவார். நுபுர் சர்மா விவகாரத்தில் இது நடைபெறவில்லை என போலீசார் கூறியுள்ளனர். என்னை பொறுத்தவரை எனது மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும் '' என கூறியுள்ளார்.
உதய்ப்பூர், மகாராஷ்டிரா கொலை
முன்னதாக நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்தாக கூறி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடை நடத்திய கண்ணையா லால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இதேபோல் மகாராஷ்டிரா மாநிலம், அமராவதி பகுதியை சேர்ந்தவர் உமேஷ் கோல்ஹே என்பவர் கொலை செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.