மத்திய அரசுக்கு துணிச்சல் உள்ளதா.. தாலிபன்கள் அமைப்பின் பெயரை குறிப்பிட்டு.. ஒவைசி சவால்
பாட்னா: சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்(யுஏபிஏ) சட்டத்தின் கீழ் இந்தியாவில் தாலிபன்கள் அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவித்து, தடை செய்ய மத்திய அரசுக்கு துணிச்சல் உள்ளதா என அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவரும் ஹைதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி சவால் விடுத்துள்ளார்.
முன்னதாக கடந்த வாரம் அளித்த பேட்டியில் தோஹாவில் தலிபான் தலைவர்களை இந்திய தூதர் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய ஏன் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அசாதுதீன் ஒவைசி கேள்வி எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் நேற்று பீகார் தலைநகர் பாட்னாவில் அசாதுதீன் ஒவைசி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, தலிபான்கள் வளர்ச்சி சீனா, பாகிஸ்தானுக்கு வேண்டுமானால் பயன் அளிக்கலாம். ஆனால் பாஜகவைப் பொறுத்தவரை அனைத்து முஸ்லிம்களும் தலிபான்கள்தான் என்று விமர்சித்தார்.

துணிச்சல் உள்ளதா
இது தொடர்பாக அவர் கூறும் போது, தாலிபன் அமைப்பை தீவிரவாத அமைப்பு என சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்து அறிவிக்க மத்திய அரசுக்கு துணிச்சல் உள்ளதா? தாலிபன்கள் வளர்வது இந்தியாவுக்கு பெரும் கவலைக்குரியதாக மாறிவிடும் என கடந்த 2013ம் ஆண்டிலிருந்து நான் கூறி வருகிறேன். இன்றைய தாலிபன்கள் வளர்ச்சி சீனா, பாகிஸ்தானுக்கு வேண்டுமென்றால் நன்மை தருவதாக இருக்கலாம். ஆனால் பாஜகவைப் பொறுத்தவரை அனைத்து முஸ்லிம்களும் தாலிபன்கள் தான்.

விளக்கம் சொல்ல முடியுமா
அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டு வைக்காமல் ஏஐஎம்ஐஎம் கட்சி 100 இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது. நாங்கள் தனித்து போட்டியிட்டு ஏதோ சில கட்சிகளுக்கு (பாஜக கூட்டணி) உதவி செய்தோம் எனக் குற்றம்சாட்டுபவர்கள் லோக்சபா தேர்தலில் நாங்கள் போட்டியிடாத நிலையில் என்ன நடந்தது என்பதற்கு விளக்கம் சொல்வார்களா? பீகாரில் நாங்கள் 19 இடங்களி்ல் போட்டியி்ட்டு 5 இடங்களில் வென்றோம். முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெறுவதற்காக நாங்க்ள் எங்கள் எல்லையை விரிவுபடுத்துவோம்.

கல்வி அறிவு
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் முலாயம் சிங் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது என்பது மக்களின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சியாக நினைக்கிறோம். உத்தரப்பிரதேச . முஸ்லிம்கள் கல்வியறிவில் மிகவும் பின்தங்கியவர்கள், கல்வி இடைநிற்றலிலும் அதிகமான சதவீதத்தில் இருக்கிறார்கள். அங்குள்ள ஏராளமான குழந்தைகளுக்கு சரிவிகித சத்துணவு கூட கிடைக்கவில்லை" இவ்வாறு ஒவைசி தெரிவித்தார்.

சந்திப்பு ஏன்
முன்னதாக கடந்த செப்டம்ர் 2ம் தேதி அசாதுதீன் ஒவைசி அளித்த பேட்டியில், தலிபான் தீவிரவாத அமைப்பா என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். தோஹாவில் தலிபானை இந்திய தூதர் சந்தித்தது குறித்து பல்வேறு கேள்விகள் எழும்புகின்றன. இது தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். அப்படி சந்தித்தது உண்மையென்றால் தலிபான் விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். தலிபான்கள் தீவிரவாதிகள் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு என்றால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது ஏன் என்பதையும் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications