கங்கை நதியில்.. குழந்தை உட்பட பலரது சடலங்கள் மிதந்த பரிதாபம்.. பீகாரில் அதிர்ச்சி
பாட்னா: கங்கை நதியில், இறந்த சடலங்கள் மிதக்கும் அவலம் இன்றும் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநில தலைநகரான பாட்னா மாவட்டத்தில் உள்ள, குலாபி காட் பகுதியில், குழந்தையின் உடல் உட்பட, பல சடலங்கள் மிதந்ததாக அம்மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தின் நரஹி பகுதியில் உள்ள பாரவுலி, உஜியார் மற்றும் குல்ஹாடியாயின் கங்கை நதிப்பகுதியில், சுமார் 52 சடலங்கள் மிதந்து சென்றதாக, பல்லியா பொதுமக்கள் சமீபத்தில் தெரிவித்தனர். ஆனால், அங்கு கண்டுபிடிக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கையை மாவட்ட நிர்வாகம் வெளியிடவில்லை.

கொரோனா காரணமாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்ததால், சடலங்களை எரிக்க இடம் இல்லாமல், இப்படி, கங்கையில் மிதக்க விட்டிருக்க கூடும் என்ற சந்தேகங்கள் பரபரப்பை ஏற்படுத்தின.
இதேபோல ஹமிர்பூர் மாவட்ட மக்கள், மே 10ம் தேதி, சுமார் 5 உடல்கள், யமுனை நதியில், மிதந்ததாக கூறியிருந்தனர்.
இந்த பரபரப்புகள் அடங்கும் முன்பாக, மே 11ம் தேதி, பீகார் மாநிலம் பக்சர் பகுதியில் கங்கை நதியில் 71 சடலங்கள் மிதந்து சென்றது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாட்னா மாவட்ட கலெக்டர், சந்திரசேகர் சிங், கங்கை நதியில் நிறைய சடலங்கள் மிதந்து வந்ததாகவும், இதில் ஒரு குழந்தை சடலமும் இருந்ததாகவும் கூறியுள்ளார். பாட்னா மாவட்டத்தில் கங்கையில் சடலங்களை வீசக்கூடாது என்பதற்காக தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது என்று சந்திரசேகர் தெரிவித்தார்.

வயதாகி உயிரிழந்தோரை கங்கை நதியில் வீசுவதை சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால் குழந்தையின் சடலம் மிதந்ததாக பாட்னா கலெக்டர் கூறியுள்ளதை வைத்து பார்த்தால், கொரோனாவால் உயிரிழந்த சடலங்களை நதியில் வீசியிருக்கலாம் என்ற சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளது.

இதனிடையே, #GangaExposedModi என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் இன்று தேசிய அளவில் டிரெண்ட்டானது. கங்கை நதியில் சடலங்கள் மிதப்பது, பிரதமர் மோடியின் திறமையின்மையை வெளிக்காட்டிவிட்டது என இந்த ஹேஷ்டேக்கில் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.












Click it and Unblock the Notifications