கடந்த ஆண்டு 1200 கிமீ தூரம் சைக்கிளில் அழைத்து வந்த ஜோதிகுமாரி.. இந்த ஆண்டு தந்தையை பறிகொடுத்த சோகம்
பாட்னா: காலில் அடிப்பட்ட தந்தையை 1200 கி.மீ. தூரம் சைக்கிளில் உட்காரவைத்து சொந்த ஊருக்கு வந்த ஜோதி குமாரியின் தந்தை மோகன் பாஸ்வான் மாரடைப்பால் நேற்று மரணமடைந்தார்.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தளர்வுகளற்ற லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது. பீகாரை சேர்ந்தவர் மோகன் பாஸ்வான். இவர் டெல்லியில் உள்ள குர்கானில் சைக்கிள் ரிக்ஷா ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார்.
தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
இந்தியா முழுவதும் பொது முடக்கத்தால் வருமானம் இன்றி தவித்த மோகன் பசியோடும் பட்டினியோடும் அங்கேயே இருந்தார். இந்த நிலையில் சொந்த ஊரான பீகாருக்கு செல்லலாம் என நினைத்த போது போதிய காசு இல்லாமல் லாரியில் கூட அவரை யாரும் ஏற்றவில்லை.
சைக்கிள் பயணம்
இந்த நிலையில் அடிப்பட்ட காலுடன் எங்கும் செல்ல முடியாமல் தவித்த மோகனை அவரது மகள் ஜோதி குமாரி (15) சைக்கிளில் அமர வைத்து 1200 கி.மீ. தூரம் பயணித்த 7 நாட்களில் சொந்த ஊரான தர்பங்காவுக்கு வந்து சேர்ந்தார். இந்த சம்பவம் இந்தியாவில் வைரலானது.
தந்தை
தந்தையின் மீது கொண்ட பாசத்திற்காக ஜோதி குமாரிக்கு பாராட்டுகள் குவிந்தன. டிரம்பின் மகள் இவாங்கா டிரம்பும் ஜோதி குமாரியை தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியிருந்தார். தேசிய அளவிலான சைக்கிள் பந்தயத்திற்கு ஜோதியை தயார்படுத்தும் நோக்கில் பயிற்சி அளிக்க இந்திய சைக்கிள் பந்தய கூட்டமைப்பு முன் வந்தது.
பாசம்
தந்தை மீது ஜோதி வைத்துள்ள பாசத்தையும் புலம்பெயர் தொழிலாளர்களின் வேதனையையும் இந்த சைக்கிள் பயணம் விவரித்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் மோகன் பாஸ்வானுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். இது ஜோதி குமாரியின் குடும்பத்தை நிலைக்குலைய செய்துள்ளது.
சொந்த ஊர்
கடந்த ஆண்டு இதே மாதத்தில் தந்தையை காப்பாற்றி சொந்த ஊருக்கு அழைத்து வந்த ஜோதி குமாரி இந்த ஆண்டு தனது தந்தையை பறிகொடுத்துவிட்டார். இதை அறிந்த தர்பங்கா மாவட்ட ஆட்சியர் ஊரக வளர்ச்சி அதிகாரியை அந்த கிராமத்திற்கு அனுப்பி அந்த குடும்பத்தை சந்திக்குமாறு கூறியுள்ளார். ஜோதி குமாரியின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.