அடடே! ஏழை எம்எல்ஏவுக்கு ஒரு வழியாக கிடைத்தது வீடு! கலங்கி நின்றதால் நெகிழ்ச்சி.. நம் நாட்டில்தான்
பாட்னா: பீகாரில் மிகவும் ஏழ்மையான எம்எல்ஏவாக அறியப்படும் ஒருவர் திடீரென நெகிழ்ச்சியில் கண் கலங்கிய வீடியோ இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.
அரசியல்வாதிகள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கோடிகளில் புரளும் பணக்காரர்கள் தான். இவர்கள் அடித்தட்டு மக்களிடம் இருந்து எப்போதும் விலகியே இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
இருப்பினும், எல்லா அரசியல்வாதிகளும் அப்படி இருப்பதில்லை. இன்னும் கூட பலர், நம்முடன் நின்று மக்கள் பிரச்சினைகளுக்குத் தொடர்ந்து குரல் கொடுத்தே வருகின்றனர்.
பாஜகவை விரட்டி நாட்டை முன்னேற்றுவோம்.. சோனியாவை சந்தித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சூளுரை
ஏழை எம்எல்ஏ
அப்படிப்பட்ட ஒருவர் பீகார் ககாரியா மாவட்டத்தின் அலாலி எம்எல்ஏ ராம்விரிக்ஷ் சதா. ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த இவர் தான் பீகார் மாநிலத்திலேயே மிகவும் ஏழ்மையான சட்டமன்ற உறுப்பினராகக் கருதப்படுகிறார். இவர் தற்போது 2004ஆம் ஆண்டு ககாரியாவின் ரன் கிராமத்தில் இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீட்டில் வசித்து வருகிறார்.
பீகார் அரசு
இவருக்கு மொத்தம் ஐந்து மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த பெரிய குடும்பம் அந்த ஒரே இரட்டை படுக்கையறை கொண்ட வீட்டில் தான் வசித்து வருகிறது. இதனிடையே பீகார் அரசு தனது மாநிலத்தில் வீடுகள் தேவைப்படும் எம்எல்ஏக்களுக்கு அரசின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி தர முடிவு செய்தது. அதன்படி முதற்கட்டமாக எட்டு எம்எல்ஏக்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன.
கண்ணீர்
அதன்படி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராம்விரிக்ஷ் சதாவுக்கு வீடு வழங்கப்பட்டது. மூன்று மாடி அரசு விடுதியின் சாவி அவருக்கு வழங்கப்பட்டது. அரசு விடுதின் சாவியை அவர் பெறும் போது கண் கலங்கிவிட்டார். இனிமேலாவது கொஞ்சக் காலம் தனது குடும்ப உறுப்பினர்கள் சற்றே வசதியான வீட்டில் வசிக்க முடியும் என்று அவர் கண்ணீருடன் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
உற்சாகம்
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "ஒட்டுமொத்த பீகார் மாநிலத்தில் நான் தான் ஏழ்மை நிலையில் இருக்கும் எம்எல்ஏ. எப்போதுமே ஏழைக்கு ஒன்று கிடைத்தால் அது தான் தீபாவளி.. எனக்கும் இது தான தீபாவளி. முதல்வர் நிதிஷ்குமார் வீட்டின் சாவியை என்னிடம் கொடுத்தார். இதையெல்லாம் நான் கனவில் கூட நினைத்துப் பார்த்தது இல்லை. என்றும் நான் இதை மறக்க மாட்டேன்" என்று அவர் தெரிவித்தார்.
யார் இவர்
இப்போது வீட்டைப் பெற்றுள்ள ராம்விரிக்ஷ் சதா இந்தியாவில் உள்ள பட்டியல் சாதிகளில் மிகவும் ஏழ்மையானவர்கள் என்று கூறப்படும் மகாதலித் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். இந்த சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் சம்பவங்கள் தொடர்ந்து நடந்தே வருகிறது. எலி பிடிப்பதே இவர்களின் பரம்பரை தொழிலாகும். ஏழ்மையான சமூகத்தில் இருந்து வந்து இப்போது இவர் எம்எல்ஏ ஆகியுள்ளார்.
சொத்து
கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டசபைத் தேர்தலில் அலாலி தொகுதியில் போட்டியிட்டு ராம்விரிக்ஷ் சதா வெற்றி பெற்றார். 46 வயதான இவர் எம்எல்ஏ ஆவது இதுவே முதல்முறையாகும். அப்போது இவர் தாக்கல் செய்திருந்த தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் சதாவின் மொத்த அசையும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.70,000 ஆகும். அதில் ரூ.25,000 ரொக்கமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.