"இந்தியாவில் வசிக்கும் அனைவரும் இந்துக்கள்".. புது விளக்கம் தந்த ஆர்எஸ்எஸ் மோகன் பகவத்.. சர்ச்சை!
பாட்னா: இந்தியாவில் வசிக்கும் அனைவரும் இந்துக்கள் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்துத்துவம் என்பது நூற்றாண்டு பழமையானது என்றும், இதிலிருந்துதான் பல பிரிவுகள் பிரிந்து சென்றுள்ளன எனவும் அவர் கூறியிருக்கிறார்.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம் கூறியுள்ள நிலையில், மோகன் பகவத் இவ்வாறு பேசியிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்தியாவை தாய்நாடாக பார்க்கும் அனைவரும் இந்துக்கள் தான்.. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு
ஆர்எஸ்எஸ்
பீகாரில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் பேசியதாவது, "இந்தியாவில் வாழும் அனைத்து மக்களும் இந்துக்கள்தான். வெவ்வேறு நிலப்பகுதிகளில் உள்ள வெவ்வேறு கலாச்சார பண்பாட்டின் காரணமாக நாட்டில் பன்முகத்தன்மை செழித்திருக்கிறது. இந்துக்கள் என்பவர்கள் பாரத மாதாவை புகழ்ந்து சமஸ்கிருத வசனங்களைப் பாட ஒப்புக்கொண்டு நாட்டின் கலாச்சாரத்தை பாதுகாப்பதில் உறுதியுடன் இருப்பவர்களாவார்கள். இவர்கள்தான் இந்துக்கள். இவர்களுக்காகவே ஆர்எஸ்எஸ் தன்னலமற்ற சேவைகளை செய்துகொண்டிருக்கிறது.
இந்து
நாட்டில் வசிப்பவர்கள் வேறு பிரிவுகளில் கூட இருக்கலாம். ஆனால் எல்லாவற்றிற்கும் தோற்றம் இந்து மதம்தான். இந்துத்துவா என்பது நூறாண்டுக்கால பழமை வாய்ந்தது. தற்போது அதிலிருந்து பிரிந்தவைதான் மற்றவைகள். இவைகள் ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாமல் இருக்கலாம். ஒன்றுக்கொன்று எதிரானதாகவும் இருக்கலாம். ஆனால் இவைகள் அனைத்தும் தங்களது தோற்றத்திற்காக இந்து மதத்திற்கு கடன்பட்டுள்ளன. பிறரிடம் தன்னை பார்ப்பது, பெண்களை காம பொருளாக பார்க்காமல் தயாக பார்ப்பது, பிறரின் செல்வத்திற்கு ஆசைப்படாமல் இருப்பதையே இந்து மதம் வலியுறுத்துகிறது.
தொண்டர்கள்
ஆக இந்துத்துவா என்பது ஒரு பிணைப்பு சக்தி. தங்களை இந்துக்கள் என்று நம்புவோர்கள் அனைவரும் இந்துக்கள்தான். இவ்வாறு நம்புபவர்களின் முன்னோர்களும் இந்துக்களாகதான் இருந்தனர். தற்போது மகத்தான தேசத்தை உருவாக்க ஆர்எஸ்எஸ் ஒரு இணக்கமான சூழலை உருவாக்க முயன்று வருகிறது. நமது ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் தினமும் 1 மணி நேரம் 'ஷாகாக்களில்' ஈடுபடுகின்றனர். மீதமுள்ள 23 மணி நேரம் அவர்கள் ஒரு பைசா கூட பெறாமல் தன்னலமற்ற சேவைகளில் ஈடுபடுகின்றனர். இயற்கை பேரிடர்கள், விபத்து போன்ற இடங்களில் மீட்டுப்புப் பணிகளில் நம்முடைய தொண்டர்கள் ஈடுபடுகின்றனர்.
குடிமக்கள்
இதற்காக நமக்கு எவ்விதமான புகழ்ச்சியும், பாராட்டும் வேண்டியதில்லை. சமுதாயம் பொறுப்புகளை உணர்ந்து செயல்படாததால் உருவானதுதான் ஆர்எஸ்எஸ் இயக்கம். எனவே அனைத்து மக்களும் இதேபோல தன்னலமற்ற சேவையை செய்ய முன்வந்தார்கள் எனில் இந்த அமைப்புக்கு அவசியம் இருக்காது. ஏனெனில் அப்போது நாட்டின் குடிமக்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள்" என்று மோகன் பகவத் கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக மோகன் பகவத்தின் பேச்சுகள் அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்தியாவின் பழம்பெருமையை மீட்டெடுப்பதே எங்களின் நோக்கம் என்று சமீபத்தில் இவர் பேசியிருந்தது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது. இவரது பேச்சு அரசியல் தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தாலும், மறுபுறம் நெட்சின்கள் இந்த கருத்துக்களை கலாய்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.