பீகார் சுகாதார அதிகாரி வீட்டில் சோதனை! பணத்தை எண்ணியே டயர்ட் ஆன அதிகாரிகள்! வாயை பிளந்த நெட்டிசன்கள்
பாட்னா: பீகாரில் சுகாதாரத் துறையினர் நடத்திய ரெய்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் ஊழலும் லஞ்சமும் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு இந்த இரண்டும் தான் மிகப் பெரிய தடையாக உள்ளது.
லஞ்சம் வாங்கும் அதிகாரிகளைக் கண்டறிந்து அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
எம்ஜிஎம் குழுமத்தில் ஐடி ரெய்டு.. ரூ.400 கோடி வரி ஏய்ப்பு.. வருமான வரித்துறை அறிக்கை..!
பீகார்
இதனிடையே பீகார் மாநிலத்தில் ரெய்ட் சமயத்தில் கண்டுபிடித்த ரொக்கத்தைப் பார்த்து லஞ்ச ஒழிப்புத் துறையினரே ஒரு நொடி ஆடிப்போய்விட்டனர். பீகார் மாநிலம் சுகாதாரத் துறையில் மருந்து பிரிவில் இன்ஸ்பெக்டராக உள்ளவர் ஜிதேந்திர குமார். இவர் வருமானத்திற்கு அதிகமாகப் பல கோடி ரூபாய் சொத்து சேர்த்து உள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்குப் புகார் கிடைத்தது.
ரெய்டு
இந்த புகாரின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணை நடத்தினர். அதில் அவர் மீது விசாரணை நடத்த முகாந்திரம் உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். பாட்னாவில் உள்ள வீடு உட்பட ஒரே நேரத்தில் நான்கு இடங்களில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. காலை நேரத்தில் தொடங்கப்பட்ட இந்த சோதனை பல மணி நேரம் நீடித்தது.
லஞ்ச ஒழிப்புத் துறை
இந்த அதிரடி ரெய்டில் கண்டுபிடிக்கப்பட்ட ரொக்கம், தங்கம், வெள்ளியைப் பார்த்து லஞ்ச ஒழிப்புத் துறையினரே சற்று மிரண்டுவிட்டனர். அவரது வீட்டில் இருந்து ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல பல கிலோ தங்கம், வெள்ளி நகைகளையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், விலை உயர்ந்த 5 சொகுசு கார்களைும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
படுக்கை
சோதனையின் போது ஜிதேந்திர குமாரின் அறையில் இருந்து படுக்கையில் அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வழக்கமான படுக்கையைப் போல இல்லாமல் இது சற்று கெட்டியாக இருந்துள்ளது. இதையடுத்து அதைப் பிரித்துச் சோதித்த போது, அதிகாரிகள் மிரண்டு விட்டனர் என்றே சொல்லலாம். ஏனென்றால், படுக்கை முழுவதும் கட்டுக் கட்டாக அங்குப் பணம் இருந்துள்ளது.
|
டயர்ட்
அவை அத்தனையும் 100, 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாகவே இருந்துள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறையினர் அந்த நோட்டுகளை எண்ணத் தொங்கியதும், அது முடிவே இல்லாத நெடுந்தொடர் போல நீண்டுள்ளது. பணத்தை எண்ணி எண்ணியே அதிகாரிகள் டயர்ட் ஆகி உள்ளனர். நள்ளிரவைத் தாண்டியும் கூட பணத்தை எண்ணும் பணிகள் முடிவடையவில்லை எனக் கூறப்படுகிறது. ரொக்கத்தைத் தாண்டி பல சொத்துகளின் பத்திரங்கள், தங்கம், வெள்ளி நகைகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
யார் இவர்
இதுவரை அவரிடம் இருந்து எத்தனை கோடி ரூயாய் கைப்பற்றப்பட்டு உள்ளது என்பது குறித்த தகவல்கள் தெளிவாக இல்லை. பல்வேறு இடங்களில் அவர் சொத்துகளைப் பதுங்கி வைத்து இருப்பதால் அதை மதிப்பிட்டு கணிகிடும் பணிகள் தாமதமாகி உள்ளது. அரசு அதிகாரியான இவர், சொந்தமாக பார்மஸி கல்லூரி ஒன்றை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.