Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மண்டல் vs கமண்டல்.. நாட்டிலேயே முதல்முறை! சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்கும் பீகார் அரசு! ஏன் முக்கியம்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: நாட்டில் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று சாதிவாரியான கணக்கெடுப்பு.. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் திட்டத்தை முதல் முறையாக நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் அரசு இன்று முதல் தொடங்க உள்ளது.

இந்தியாவில் சாதிவாரியான கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது நாடு முழுக்க உள்ள பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு இந்த சாதிவாரியான கணக்கெடுப்பை வலியுறுத்தினர்.

தமிழ்நாட்டிலும் கூட பல்வேறு அமைப்புகள் சாதிவாரியான கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறது. இந்தச் சூழலில் நாட்டிலேயே முதல்முறையாகப் பீகார் மாநிலத்தில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

 சாதிவாரியான கணக்கெடுப்பு

சாதிவாரியான கணக்கெடுப்பு

இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை ஏழு முறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் பட்டியல் மற்றும் பழங்குடியினர் தவிர வேறு எந்த சமூகங்களின் மக்கள் தொகை எண்ணிக்கை குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசிடம் இது குறித்த துல்லியமான தகவல்கள் இல்லை என்று சொல்லப்பட்டு வந்தது. இதனால் சாதிவாரியாக இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைக் கொண்டு வரச் சாதிவாரியான கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.

முதல்முறை

முதல்முறை

இதனிடையே நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் அரசு முதல்முறையாக இந்த விஷயத்தைக் கையில் எடுத்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்துக்கு ரூ.500 கோடி செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதற்கட்ட பணிகள் வரும் ஜனவரி 21ஆம் தேதிக்குள் முடிவடையும் என்று கூறப்படுகிறது. இதில் மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளின் எண்ணிக்கையும் கணக்கிடப்படும்.

 பீகார் அரசு

பீகார் அரசு

இரண்டாம்கட்ட பணிகள் வரும் மார்ச் முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த பணிகளின் போதுதான், அனைத்து சாதிகள், உட்பிரிவுகள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும். மேலும், இந்த கணக்கெடுப்பில் நிதி நிலை குறித்த தகவல்களையும் பதிவு செய்வார்கள். இதற்கான பணிகளைப் பீகார் அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடுபட உள்ளவர்களுக்குக் கடந்த டிச.15ஆம் தேதி முதலே சிறப்புப் பயிற்சியையும் பீகார் அரசு அளித்துள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளில் ஆசிரியர்கள், அங்கன்வாடி, ஜீவிகா பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.

 என்ன கேள்விகள்

என்ன கேள்விகள்


பஞ்சாயத்து முதல் மாவட்ட அளவு வரை மொத்தம் எட்டு நிலைகளில் இந்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் நேரடியாக மொபைல் அப்ளிகேஷன் மூலம் டிஜிட்டல் முறையில் தகவல்கள் சேகரிக்கப்படும். இந்த செயலியில் இடம், சாதி, குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை, தொழில் மற்றும் ஆண்டு வருமானம் பற்றிய கேள்விகள் இருக்கும். கடந்த 2021ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில், பட்டியலிடப்பட்ட சாதிகள் (எஸ்சி) மற்றும் பழங்குடியினர் (எஸ்டி) தவிர்த்து, சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படாது என்று பீகாரைச் சேர்ந்த பாஜக எம்.பி.யுமான உள்துறை இணை அமைச்சருமான நித்யானந்த் ராய் கூறியிருந்தார். இருந்த போதிலும், அதற்கு நேர்மாறாக பீகார் அரசு சாதிவாரியான கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளது.

 எதற்கு உதவும்

எதற்கு உதவும்

முன்னதாக பிப். மாதத்திற்குள் இந்த சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்கப் பீகார் அரசு திட்டமிட்டிருந்தது. இருப்பினும், சில தாமதங்களால் சாதிவாரி கணக்கெடுப்பை முடிப்பதற்கான காலக்கெடுவை மூன்று மாதங்களுக்கு அதாவது மே 2023 வரை மத்திய அரசு நீட்டித்தது.. இதில் பெறப்படும் தகவல்களைக் கொண்டு சாதி வாரியாக சிறப்பான நலத்திட்டங்களைக் கொண்டு வர முடியும் என்று அம்மாநில அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஓபிசி பிரிவினர் தொடர்பான தரவு இல்லாததால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகையைச் சரியாக மதிப்பிடுவது கடினமாக உள்ளதாகப் பீகார் அரசு கூறுகிறது.

 ஓபிசி மக்கள் தொகை

ஓபிசி மக்கள் தொகை

1931ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில், ஓபிசி மக்கள்தொகை 52 சதவீதமாக இருந்தது. மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்த போது, கடந்த 2011இல் சமூக-பொருளாதார மற்றும் ஜாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இருப்பினும், சாதி தரவுகள் வெளியிடப்படவில்லை. ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக 2018, 2019 ஆண்டுகளில் பீகார் சட்டமன்றம் ஒருமனதாக இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியது.

 மாற்ற வேண்டும்

மாற்ற வேண்டும்

ஜூன் 2022இல், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் பீகாரில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் இதற்கு அனைவரும் அனுமதி அளித்தனர். பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.. இருப்பினும், ஓபிசி பிரிவினருக்கு மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறும் இதன் ஆதரவாளர்கள், இடஒதுக்கீட்டை மக்கள்தொகைக்கு ஏற்ப திருத்தப்பட வேண்டும் என்றும் அதற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்றும் கூறுகின்றனர்.

 தயக்கம் ஏன்

தயக்கம் ஏன்

1990களில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ரத யாத்திரையை நடத்திய பாஜகவின் கமண்டல அரசியலை எதிர்கொள்ளும் வகையில், ஓபிசியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் அறிக்கையை அப்போது மத்தியில் இருந்த ஜனதா தள அரசு அமல்படுத்தியது. இதை சில பிரிவினர் வரவேற்றனர். இருப்பினும், அப்போது மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தியதால் நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. இப்போதும் மீண்டும் அதேபோன்ற ஒரு சூழல் ஏற்படக் கூடாது என்பதற்காகவே மத்திய அரசு சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பிற்குத் தயங்குகிறது. இருந்த போதிலும் பீகார் அரசு துணிச்சலாக இந்த திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+