பியூட்டி பார்லரில் பெண்ணை தாக்கிய திமுக பிரமுகர்.. மீண்டும் கட்சிக்குள் சேர்ப்பு
பியூட்டி பார்லர் பெண்ணை தாக்கிய திமுக பிரமுகர் கட்சிக்குள் சேர்க்கப்பட்டார்.
பெரம்பலூர்: பெண்ணை எட்டி உதைத்து, கழுத்தை நெறித்த திமுக பிரமுகரை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் வெங்கடேசபுரத்தில் சத்யா என்பவர் பல ஆண்டுகளாகவே லேடீஸ் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையில் கடந்த செப்டம்பர் மாதம், திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார் என்பவர் திடீரென நுழைந்தார்.
கடையினுள் இருந்த சத்யாவை பலமாக தாக்கினார். பிறகு அவரது கழுத்தை பிடித்து கீழே தள்ளியதுடன் தனது கால்களாலும் எட்டி எட்டி உதைத்தார். வலி தாங்க முடியாமல் சத்யா கதறினார்.
தற்காலிக நீக்கம்
இப்படி திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார் தனது காலால் சந்தியாவின் வயிற்றில் எட்டி உதைத்து தாக்கும் காட்சி அங்கிருந்த சிசிடிவி வீடியோவில் பதிவாகி இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. வாட்ஸ்அப்பிலும் இந்த வீடியோ காட்சி வைரலாக பரவியது. இதனையடுத்து ஒரு பக்கம் போலீசார் செல்வக்குமாரை கைது செய்தாலும், மறு பக்கம், செல்வகுமாரை கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் என திமுக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது.
முரசொலி அறிவிப்பு
இந்த நிலையில், செல்வகுமார் மீண்டும் தி.மு.கவில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுகவின் அதிகாரபூர்வ ஏடான முரசொலியிலும் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மன்னிப்பு கடிதம்
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செல்வகுமார், பியூட்டி பார்லர் சம்பவம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்ததாகவும். அதனால்தான் அவரை மீண்டும் கட்யில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சலசலப்பு
கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் சில மாதங்களிலேயே கட்சியில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.