காவல்துறை அத்துமீறல்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், நன்மதிப்பு கெடும்: உயர் நீதிமன்றம்
காவல்துறையினரின் அத்துமீறல்கள் மீது உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், காவல்துறை மீதான நன்மதிப்பிற்கும், மரியாதைக்கும் பாதிப்பு ஏற்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நிலம் விற்கும் பிரச்சினையில் தலையிட்ட எஸ்.ஐ
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நூர்நிஷா. இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், "பொதக்குடியில் எனக்கு சொந்தமான நிலத்தை ஜவகர் நிஷா, முபாரக் நாசியா, யூசப் நாசியா ஆகியோரிடம் விற்க முன்தொகை வாங்கினேன். நிலத்தின் விலை அதிகமாக இருக்கிறது என்று கூறி பணத்தை திருப்பிக் கேட்டனர், உடனே திருப்பிக் கொடுக்க முடியாததால், என் மீதும், எனது மகன் மீது கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மிரட்டி வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கிய எஸ்.ஐ
புகாரை பெற்ற உதவி ஆய்வாளர் எங்களுக்கு எதிராக கட்டப்பஞ்சாயத்து செய்ததுடன், 3 வாரத்தில் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறி வெற்றுக் காகிதத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டார். இதுகுறித்து திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் செய்ய முயற்சித்தோம்.
அத்துமீறி வீட்டை அபகரித்து நகைப்பணத்தை எடுத்துச் சென்றவர்களுக்கு உதவிய எஸ்.ஐ
இந்நிலையில், நிலத்திற்கு பணம் கொடுத்த மூவரும், உதவி ஆய்வாளர் மற்றும் சிலருடன் நவம்பர் 18 ஆம் தேதி எனது வீட்டுக்குள் நுழைந்து, என் கணவரையும், என்னையும் அடித்து, வீட்டை விட்டு விரட்டி வீட்டை சட்டவிரோதமாக கையகப்படுத்திக் கொண்டதுடன், வீட்டிலிருந்த பணம் மற்றும் 27 சவரன் தங்க நகைகளை எடுத்து சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யவும், வீட்டை மீட்டு ஒப்படைக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக மாவட்ட எஸ்.பி விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார் பிறப்பித்த உத்தரவில், நவம்பர் 27ஆம் தேதி தபால் மூலம் புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லை என மனுதாரர் கூறியுள்ளதையும், உதவி ஆய்வாளருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டு உள்ளதையும் சுட்டிக்காட்டி இதுகுறித்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும்" என உத்தரவிட்டார்.
காவல்துறை மீதான நன்மதிப்பை கெடுத்துக்கொள்ளாதீர்கள்
மேலும் காவல்துறையினரின் அத்துமீறல்கள் மீது உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், காவல்துறை மீதான நன்மதிப்பிற்கும், மரியாதைக்கும் பாதிப்பு ஏற்படும் என்று அறிவுறுத்தினார். பின்னர் நீதிபதி வழக்கு விசாரணையை டிசம்பர் 16 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.