மனுசன்னு நினைச்சீங்களா? இல்லை.. தள்ளுவண்டியில் தள்ளி செல்லப்பட்ட சிறுவன்! ஸ்ட்ரெச்சர் சேதமான அவலம்!
புதுச்சேரி : புதுச்சேரியில் ஆம்புலன்ஸ் வண்டியில் ஸ்ட்ரெச்சர் சேதமானதால் தள்ளுவண்டியில் சிறுவனை சிகிச்சைக்கு அழைத்து சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களை பெற்று வருகிறது.
ஹவுராவில் இருந்து புதுச்சேரிக்கு சனிக்கிழமை தோறும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று அந்த ரயில் ஹவுராவில் இருந்து புதுவைக்கு வந்து கொண்டிருந்தது. அந்த ரயிலில் கொல்கத்தாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பயணம் செய்தனர்.
அந்த ரயில் புதுச்சேரி அருகே வந்தபோது, அந்த குடும்பத்தை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அந்த குடும்பத்தினர் செய்வதறியாது தவித்தனர்.

சிறுவனுக்கு உடல்நலக்குறைவு
இதற்கிடையே அந்த ரயில் புதுச்சேரி ரயில்நிலையத்தை அடைந்ததும் ரயிலில் இருந்து இறங்கிய அவர்கள், சிறுவனை ஆஸ்பத்திரியில் சேர்க்க ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் புதுச்சேரி சுகாதார நிலையத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸ் ரயில் நிலையத்துக்கு விரைந்து வந்தது. ஆனால் அந்த ஆம்புலன்சில் உள்ள ஸ்ட்ரெச்சர் சேதமடைந்து காணப்பட்டதால் அதனை நடைமேடைக்கு இழுத்து செல்ல முடியவில்லை.

ஸ்ட்ரெச்சர் பழுது
இதனால் சிறுவனை உடனடியாக சிகிச்சைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. தொடர்ந்து சிறுவனின் குடும்பத்தினர் அங்கிருந்த பார்சல் ஏற்றி செல்லும் தள்ளுவண்டியில் சிறுவனை படுக்க வைத்து தள்ளிக் கொண்டு ரயில் நிலையம் வெளியே நின்ற ஆம்புலன்சுக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவனை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அலட்சியம்
பொதுவாக ஆம்புலன்சில் முதலுதவி சிகிச்சை, ஸ்ட்ரெச்சர் உள்ளிட்ட வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால் புதுச்சேரி சுகாதார நிலையத்திற்கு சொந்தமான ஆம்புலன்சில் எந்த ஒரு வசதியும் கிடையாது. இதுகுறித்து ஆம்புலன்ஸ் டிரைவர் கூறுகையில், 'ஆம்புலன்சில் இருந்த ஸ்ட்ரெச்சர் கடந்த 3 மாதத்திற்கு முன்பு சேதம் அடைந்தது.

கடும் கண்டனம்
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் புதிய ஸ்ட்ரெச்சர் வாங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அவசர நேரத்தில் நோயாளிகளை ஆம்புலன்சில் ஏற்றுவதற்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. புதிய ஸ்ட்ரெச்சர் வாங்க ரூ.8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை செலவு ஆகும். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்றார். இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications