புதுச்சேரியில் கூண்டு கட்டிய வேனுக்குள் இப்படி ஒரு வேலையா.. அதிர்ந்த போலீஸ்.. திமுக பிரமுகர் கைது
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே குடியிருப்பு பகுதியில் கூண்டு கட்டிய வேனுக்குள் போலி மதுபான ஆலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தி.மு.க. பிரமுகர் உள்பட 6 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் புதுச்சேரி மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதியாகும். அங்கிருந்து மதுபானங்கள் அடிக்கடி கடத்தப்படுவது உண்டு. அப்படி கடத்தப்படுவதை தடுக்க அந்த மாவட்டத்தில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் விழுப்புரம் மத்திய நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சின்ன காமணன், சப்-இன்ஸ்பெக்டர் இனாயத் பாஷா தலைமையிலான போலீசார் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பகுதியில் கடந்த மே 30ம் தேதி இரவு 11 மணி அளவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
நள்ளிரவு வேளையில் புதுச்சேரியில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி சென்ற ஒரு மினி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை மடக்கி சோதனை செய்த போது, அந்த மினி லாரியில் அள்ள அள்ள மதுபாட்டில்கள் வந்து கொண்டிருந்தது. மொத்தம் 4,800 மது பாட்டில்கள் மினி லாரியில் இருந்தது.
இந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அந்த மினி லாரியில் இருந்த 5 பேரை பிடித்து உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 42), அண்ணாதுரை (51), சதீஷ் (32), கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த குமார் (55) மற்றும் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த ரங்கா (27) என்பதும் தெரியவந்தது. இவர்கள் ஐந்து பேரும் சுமார் 4,800 மதுபாட்டில்களை நாமக்கல் மாவட்டத்திற்கு கடத்தி சென்றபோது, சுங்கச்சாடி சோதனையின் போது போலீசாரிடம் சிக்கியது தெரியவந்தது.
மேற்கொண்டு அவர்களிடம் இந்த மதுபாட்டில் எப்படி வந்தது. யார் கடத்த சொன்னது என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில், இவர்களும், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த தி.மு.க. ஒன்றிய துணை செயலாளரான ராதாகிருஷ்ணன், பெங்களூருவை சேர்ந்த நரேந்திரபாபு ஆகியோரும் கூட்டாக சேர்ந்து அந்த மது பாட்டில்களை புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் இருந்து கடத்தி சென்றதும், அங்குள்ள போலி மதுபான ஆலையில் அவை உற்பத்தி செய்யப்பட்டவை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலி மதுபான ஆலையை கண்டுபிடிக்க, கைது செய்யப்பட்ட ஐந்து பேருடன், கலால்துறை தாசில்தார் ஜெயலட்சுமி. உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சின்ன காமு மற்றும் ஏராளமான போலீசார் வில்லியனூர் அருகே உள்ள உளவாய்க்கால் பகுதிக்கு சென்றார்கள்.
அங்கு குடியிருப்பு பகுதியில் நின்றிருந்த மினி லோடு கேரியர் வேனை பறிமுதல் செய்தனர். பின்னர் அதை திறந்து பார்த்தபோது அதில் சாராய கேன்கள், பாட்டில்கள், மூடிகள், கலால் வரி செலுத்தியது போல் போலி ஹாலோகிராம், போலி மதுபான ஸ்டிக்கர் போன்றவை இருந்தன.
இதுதவிர மதுபான பாட்டில்களுக்கு மூடி அடைக்கும் எந்திரம் மற்றும் போலி மதுபாட்டில் தயாரிக்க பயன்படுத்திய மூலப்பொருட்கள் போன்றவையும் இருந்தன.
இதை பார்த்த போலீசார் கூண்டு கட்டிய வேனை குடியிருப்பு பகுதியிலேயே நிறுத்தி, மது ஆலை போல் நடத்தி மது பாட்டில்களை தயாரித்து கடத்தியது தெரியவந்தது. அதே இடத்தில் கூண்டு கட்டிய மற்றொரு லாரியும் நின்று இருந்தது. அதையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மெத்தமாக இந்த வழக்கில் சக்திவேல், அண்ணாதுரை, சதீஷ், குமார், ரங்கா மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் ரொக்கம், 4,800 மதுபாட்டில்கள், 10 லிட்டர் சாராயம், மதுபானங்கள் தயாரிப்பதற்கான உபகரணங்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய 5 வாகனங்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள நரேந்திரபாபு என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications