பெரும் சோகம்.. திமுக ராஜ்யசபா எம்.பி., என்.ஆர்.இளங்கோவின் மகன் சாலை விபத்தில் பலி - முதல்வர் இரங்கல்
திமுக ராஜ்யசபா உறுப்பினர் இளங்கோ மகன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி : திமுக ராஜ்யசபா எம்.பி., என்.ஆர்.இளங்கோவின் மகன் புதுச்சேரி அருகே கார் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதிகாலையில் சாலையின் குறுக்கே மாடு வந்ததால் விபத்து ஏற்பட்டிருப்பதாக மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ சென்னையில் வசித்து வருகிறார். இவரது மகன் ராகேஷ் இவர் பணி நிமித்தமாக அவரது காரில் தனது நண்பருடன் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்றார்.
புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு திரும்பி வரும் போது, விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அடுத்த கீழ்புத்துபட்டு அருகே வந்துகொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக தடுப்புச்சுவரில் மோதி கார் நொறுங்கியது இதில் பயணம் செய்த திமுக எம்.பி.என்.ஆர் இளங்கோ மகன் ராகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
நொறுங்கிய கார்
அவருடன் பயணித்த நண்பர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்ததால், ராகேஷின் உடல் காருக்குள் மாட்டிக்கொண்டது. அதனால் அவரின் உடலை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்திருந்தார் ராகேஷ்.
காரின் பாகங்கள்
உடலை மீட்பதற்காக தொடர்ந்து போராடிய தீயணைப்புத் துறையினர், காரின் பாகங்களை அறுத்து எடுத்து ஜே.சி.பி இயந்திர உதவியோடு அகற்றிய பின்னர், சுமார் 7 மணி அளவில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்து, கோட்டக்குப்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் விசாரணை
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் கோட்டக்குப்பம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி, ராகேஷ், அவரது நண்பர் வேதவிகாஷ் இருவரும் காரில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வந்துக்கொண்டிருந்த போது அதிகாலை சுமார் 3:30 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ராகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பயணித்த நண்பர் வேதவிகாஸ் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறினார். அதிகாலையில் சாலையின் குறுக்கே மாடு வந்ததால் விபத்து ஏற்பட்டிருப்பதாக மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் , 'கழகத்தின் மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர். இளங்கோ அவர்களின் அன்பு மகன் ராகேஷ் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனைக்கும் சொல்லொண்ணா துயரத்திற்கு உள்ளானேன். ராகேஷ் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
குடும்பத்தினருக்கு இரங்கல்
கழக குடும்பத்தில் ஒருவராக இருந்து பல்வேறு வழக்குகளில் கழகத்திற்காக வாதிட்டு வரும் என்.ஆர். இளங்கோ அவர்களது சகோதரர் சமீபத்தில் மறைந்த நிலையில் ,அவரது மகனும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இளங்கோ அவர்கள் எத்தகைய வேதனைக்கு ஆளாகி இருப்பார் என்று நினைத்து பார்க்கவே உடலும், உள்ளமும் அஞ்சி நடுங்குகிறது. அன்புக்குரிய மகனை இழந்து வாடும் இளங்கோவிற்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.