புதுச்சேரியில் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு தடையில்லை.. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் பொங்கல் கொண்டாட்டங்களுக்குத் தடையில்லை என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக நாட்டில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, டிச. முதல் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
ஓமிக்ரான் கொரோனா இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
நேற்றுகூட பிரதமர் மோடி கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது,
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பொங்கல் விழாவின் பொதுக் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், புதுச்சேரியில் பொங்கல் கொண்டாட்டங்களுக்குத் தடையில்லை என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு இல்லை என்றும் புதுச்சேரியில் பொங்கல் கொண்டாட்டங்களுக்குத் தடையில்லை என்றும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
அதேநேரம் காணும் பொங்கல் அன்று மக்கள் கூட்டம் கூடுவதைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக புத்தாண்டு சமயத்திலும் தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும், புதுச்சேரியில் தடை விதிக்கப்படவில்லை. இதனால் புத்தாண்டு தினத்தில் தமிழ்நாட்டில் இருந்து பலரும் புதுச்சேரி நோக்கிப் படையெடுத்தனர். அப்போது சமூக இடைவெளி, மாஸ்க் இல்லாமல் ஒரே இடத்தில் பலரும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காகக் குவிந்திருந்தது பரபரப்பைக் கிளப்பியிருந்தது.
காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி இருந்தாலே கொரோனா பரிசோதனை கட்டாயம்!
புத்தாண்டு தினத்திற்குப் பின்னர் புதுச்சேரியில் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை உயரத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.