மின்துறை ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும்.. துணை ராணுவப் படை வருகிறது.. தமிழிசை கடைசி வார்னிங்!
புதுச்சேரி: புதுச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மின்துறை ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிடில் எஸ்மா சட்டம் பாயும் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. அண்மையில் புதுச்சேரி மின்சார வாரியத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு தீர்மானித்தது.
இருளில் மூழ்கிய புதுச்சேரி! மின்துறை தனியார்மயத்துக்கு எதிரான போராட்டம்-ஆளுநர் தமிழிசை வார்னிங்!
மின்துறை தனியார்மயம்
இந்த முடிவிற்கு காங்கிரஸ் - திமுக கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்தும், அரசு சார்பில் தீர்மானம் இயற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அரசின் இந்த முடிவை எதிர்த்து மின்துறை தனியார்மய எதிர்ப்பு அனைத்து ஊழியர் போராட்டக்குழு என்ற அமைப்பை உருவாக்கி ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஊழியர்கள் அதிர்ச்சி
இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் மின்வாரிய ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். அப்போது அவர்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தது. இந்தநிலையில் மின்சார வினியோகத்தை 100 சதவிகிதம் தனியாருக்கு வழங்குவதற்கான டெண்டர் அறிவிப்பினை புதுச்சேரி அரசு அதிரடியாக வெளியிட்டது. இது மின்வாரிய ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஊழியர்கள் போராட்டம்
அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 28ம் தேதி பணிகளை புறக்கணித்து மின்வாரி ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். வேலை நிறுத்த போராட்டத்தால் மின்அளவீடு செய்வது, மின்கட்டணம் வசூல், புதிய இணைப்புகள் வழங்குவது உள்ளிட்ட பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இருளில் மூழ்கிய புதுச்சேரி
இதனிடையே நேற்றிரவு புதுச்சேரி, காரைக்காலில் பல பகுதிகளில் மின்துறை ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்தனர். அதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக 16 துணை மின் நிலையங்களில் மின்சாரத்தை துண்டித்ததுடன், பீஸ் கட்டைகளையும் மின்துறை ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். அதனால் ஒட்டுமொத்த புதுச்சேரியும் ஒரே நேரத்தில் இருளில் மூழ்கியது.
செயற்கை மின்வெட்டு
இன்றும் மின்துறை ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் காமராசர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், மின்துறை ஊழியர்கள் போராட்டம் சரியல்ல. மருத்துவமனையில் நோயாளிகளுக்கு செயற்கை மின்வெட்டு ஏற்படுத்தியது சரி கிடையாது.
நிச்சயம் நடவடிக்கை
செயற்கையாக மின் வெட்டு ஏற்படுத்தும் வகையில் பூஸ் கட்டைகளை பிடுங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு செய்தால், என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ அந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
எஸ்மா சட்டம் பாயும்
காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அடையாளம் தெரிந்தால் தண்டிக்கப்படுவார்கள். அதேபோல் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரிக்கு துணை ராணுவப்படை வருகிறது. அதேபோல் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாய வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்தார்.