மக்களின் நலனுக்காக ஒன்றிணைவோம்.. ஆளுநர் மாளிகை தயார்.. கிரண்பேடி அதிரடி!
புதுச்சேரி: துணைநிலை ஆளுநரின் அலுவலகமும், அவரது குழுவும் சட்டத்திற்கு இணங்க புதுச்சேரி மக்களின் நலனுக்காக பணியாற்றுவதில் உறுதியாக உள்ளது என புதுச்சேரி மாநிலத்தில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் அரசு பொருப்பேற்ற பின்பு துணைநிலை ஆளுநராக கிரண்பேடி புதுச்சேரிக்கு வந்தார். அப்போதிலிருந்து அமைச்சரவை எடுக்கும் எந்த முடிவுக்கும் ஒப்புதல் வழங்காமலும், சில முடிவுகளை தானே எடுத்து அதை செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனால் ஆளுநருக்கும் அமைச்சரவைக்குமிடையே கடந்த நான்கு ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகின்றது.
இந்நிலையில் அமைச்சரவையின் முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லையென உத்தரவிடல்கோரி முதல்வரின் பாராளுமன்ற செயலர் லெட்சுமிநாராயணன் கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் அமைச்சரவைக்குத்தான் அதிகாரம் உள்ளது என தனி நீதிபதி மகாதேவன் கடந்தாண்டு உத்தரவிட்டார்.
ஹைகோர்ட் தீர்ப்பு
இதைத்தொடர்ந்து ஆளுநர் கிரண்பேடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட பணிகளில் தலையிட துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்துள்ளது. மேலும் கூட்டாட்சி தத்துவத்தின்படி துணைநிலை ஆளுநரும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்தால், இதுதொடர்பாக துணைநிலை ஆளுநர் அனுப்பும் பரிந்துரைகள் மீது விரைந்து முடிவெடுக்க மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி அமர்வை சேர்ந்த தலைமை நீதிபதி ஏ.ப்பி.சாஹி, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் உத்தரவிட்டுள்ளார்கள்.
இணைவோம்
தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை அனைவரும் மதித்து செயல்பட வேண்டும். புதுச்சேரி மக்களின் நன்மைக்காக ஒருமைப்பாடு மற்றும் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு ஒன்றிணைந்து செயல்படுவோம். துணைநிலை ஆளுநரின் அலுவலகமும், அவரது குழுவும் சட்டத்திற்கு இணங்க புதுச்சேரி மக்களின் நலனுக்காக பணியாற்றுவதில் உறுதியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
அடுத்து என்ன
தீப்பு குறித்த இந்த வழக்கை தொடர்ந்த முதலமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லெட்சுமிநாராயணன் கருத்து தெரிவிக்கையில், அதிகாரம் குறித்து இன்று வெளியான தீர்ப்பு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்பது உலக நியதி. அதைத்தான் இந்திய அரசியலமைப்பு சட்டமும் கூறுகின்றது. அதிகாரம் யாருக்கு என்று வழக்கில் டெல்லி யூனியன் பிரதேசத்தில் அமைச்சரவைக்கு அதிகாரம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு ஆளுநருக்கு அதிகாரம் என்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது.
ஒரு கண்ணா.. இரு கண்களா
ஜனநாயகத்திற்கு ஒரு கண்ணா அல்லது இரு கண்களா என்ற கேள்வியெழுந்துள்ளது. பிரஞ்சு ஆட்சியில் இருந்து விடுவிக்கப்பட்ட புதுச்சேரியை அம்மாநில மக்களின் கருத்துக்களை கேட்டுத்தான் எந்த முடிவும் எடுக்க வேண்டும் என்ற பிரஞ்சு இந்திய ஒப்பந்தம் கேள்விக்குறியாகியுள்ளது. இது தொடர்பாக ஆட்சியாளர்களும், கட்சியும் இணைந்ந்து ஆலோசித்து மக்களுக்கான அதிகாரத்தை பெற மக்களுடன் இணைந்து போராட வேண்டியது என தெரிவித்தார்.
முதல்வர் விலக வேண்டும்
இது குறித்து கருத்து தெரிவித்த புதுச்சேரி சட்டமன்றத்தின் பிரதான எதிர்கட்சியான அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன், கடந்த நான்கு ஆண்டுகளாக இரு அதிகார மையங்களும் மோதிக்கொண்டதால் புதுச்சேரியின் வளர்ச்சி தடைப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று வந்த தீர்ப்பில் ஆளுநரும் அமைச்சரவையும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளது. தொடர்ந்து அமைச்சரவையும் ஆளுநரும் மோதல் போக்கோடு செயல்பட்டு வந்தனர். கிரண்பேடியும், நாராயணசாமியும் ஒருவருக்கொருவர் ஒருமையில் பேசிவந்துள்ளதால் நீதிமன்ற தீர்ப்புபடி இவர்கள் இனி இணைந்து செயல்பட வாய்ப்பில்லை. ஆகவே மாநில நலன் கருதி முதல்வர் நாராயணசாமி அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என அன்பழகன் தெரிவித்தார்.
முடங்கிய திட்டங்கள்
இதனிடையே தீர்ப்பு குறித்து முதலமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நிறைவு பெறுவதற்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், இரு அதிகார மையங்களால் மக்கள் நலத்திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள. இந்த விவகாரத்தில் யாரேனும் ஒருவர் விட்டுக்கொடுத்து போகவேண்டும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.