கவனிச்சீங்களா.. “எல்லாமே பிளான் படி நடக்குது” - அமித்ஷா வந்துட்டு போன பின்னாடிதான் இந்த பிரச்சனையே!
புதுச்சேரி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரிக்கு வந்து சென்ற பிறகுதான் ஜிப்மரில் இந்தி திணிப்பு சர்ச்சை வெடித்துள்ளதாக நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், மருந்து பதிவு செய்வது, நோயாளிகளின் விவரக்குறிப்புகள் அனைத்தும் இந்தியில் இருக்க வேண்டும் என ஜிப்மர் இயக்குநர் உத்தரவிட்டார்.
இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், உள்துறை அமித்ஷாவே இந்த சர்ச்சைகளுக்கு காரணகர்த்தா எனக் குற்றம்சாட்டப்படுகிறது.
அடுத்து சி.ஏ.ஏ.தான்... கொரோனா ஓயும் வரை காத்திருக்கிறோம் - அமித்ஷா திட்டவட்டம்
ஜிப்மரில் இந்தி
மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அதிகாரப்பூர்வ கலந்துரையாடலுக்கு இந்தி மொழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அதன் இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஜிப்மரில் இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க, ம.தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்தி திணிப்பு சர்ச்சைகள்
உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவில் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி மொழியை அலுவல் மொழியாக ஏற்க வேண்டும் என சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதைத் தொடர்ந்து, ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை கொண்டுவரக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் தெரிவித்திருந்தனர். அரசியல் பிரமுகர்கள் மட்டுமல்லாமல் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரும் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மீண்டும் சர்ச்சை
இந்நிலையில்தான் அடுத்த சில வாரங்களுக்குள் ஜிப்மரில் இந்தி திணிப்பு சர்ச்சை எழுந்துள்ளது. அதுவும், உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரிக்கு வந்த சென்ற சில நாட்களுக்குள் தான் என்பதால் இதிலும் அமித்ஷாவின் பெயர் அடிபடுகிறது.
அமித்ஷா புதுச்சேரிக்கு வந்து சென்ற பிறகு தான் ஜிப்மரில் இந்தி குறித்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் போராட்டம்
புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நேற்று மாலை ஜிப்மர் எதிரில் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, "ஆளுநர் தமிழிசை, ஜிப்மரில் ஆய்வு மேற்கொண்டுவிட்டு, முழுமையாக இந்தி மொழி இல்லை என்று தவறான தகவலை பரப்புகிறார். அவர் பெயர் தமிழிசை சவுந்தரராஜன். ஆனால் முரண்பாடாக அவர் இந்திக்கு ஆதரவாக இருக்கிறார்." எனக் கூறினார்.
அமித்ஷாதான் காரணம்
மேலும், கடந்த 15 நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி மொழி தான் முழுமையான ஆட்சி மொழி என்று பேசினார். இந்தியா முழுவதும் அதனை கொண்டு வர பா.ஜ.க அரசு முயற்சித்து வருகிறது.
அந்த அறிவிப்புக்கு பிறகு தான் அமித்ஷா புதுச்சேரி வருகை தந்தார். அவரது வருகைக்கு கூட அமைச்சர்கள் இந்தியில் தான் வரவேற்பு பேனர் வைத்தனர். அவர் வந்து சென்ற பிறகு தான் மத்திய அரசு ஜிப்மருக்கு இந்தி குறித்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது என நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சந்தேகம்
முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியிருப்பது போல, அமித்ஷாவின் இந்தி மொழி ஆட்சி மொழி என்ற பேச்சும், அதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளும், அதையடுத்து அவர் புதுச்சேரிக்கு வந்தபோது அம்மாநில பாஜக நிர்வாகிகள் இந்தியில் பேனர் வைத்ததும் அடுத்தடுத்து நடந்துள்ளன. அதைத்தொடர்ந்துதான் ஜிப்மரில் இந்த விஷயம் நடந்துள்ளது. பா.ஜ.க அரசு திட்டப்படி இந்தியை ஆட்சி மொழியாக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதையே இது காட்டுவதாக சந்தேகம் கிளப்பப்படுகிறது.