மலையாள வாசம்! சட்டென கேரளாவாக மாறிய புதுச்சேரி.. கலாச்சாரம் மாறாத சேட்டன்களின் திருவிழா
புதுச்சேரி: முத்தப்பன் திருவிழாவை முன்னிட்டு செண்டை மேளம் முழங்க புதுச்சேரி வாழ் கேரள மக்கள் பாரம்பரிய முறைப்படி சாமிக்கு கத்தி, கள்ளு கொடுத்து வழிபாடு நடத்தினர்.
கேரள மாநிலம் கண்ணூரில் அமைந்துள்ளது பரசின்னி கடவு முத்தப்பன் கோயில். கேரள மக்களின் பாரம்பரிய பெருமைமிக்கதாக கருதப்படும் இந்த கோயிலில் சிவபெருமானே இங்கு முத்தப்பனாக அவதாரம் எடுத்துள்ளதாக மலையாள மக்கள் கருதுகின்றனர்.

இந்த கோயிலில் சிவனும் சக்தியும் திருவப்பன், வெள்ளாட்டம் என்ற இரண்டு வேடங்களை அணிந்து, மாந்திரீக நடனமாடி பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்கிறார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தமிழ் மக்களின் குல தெய்வ வழிபாடு எப்படி நடைபெறுமோ அதே போல கேரள மக்கள் முத்தப்பன் திருவிழாவை பங்குனி மாதத்தில் நடத்துகின்றனர். இந்த கோயில் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று வழிபடுவது வழக்கம்.
ஆனால், வெளியூர்களில் தங்கி இருக்கும் கேரள மக்கள் இந்த திருவிழாவில் கலந்துகொள்ள இயலாத நிலை இருந்து வந்தது. இதனை போக்கும் வகையில், புதுச்சேரி வாழ் கேரள மக்கள் கடந்த 5 ஆண்டுகளாக உள்ளூர் பாரம்பரிய முறைப்படி விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர். இறுதி நாளில் திருவப்பன், வெள்ளாட்டம் என்னும் இரண்டு வேடங்களை அணிந்து சிவனும் சக்தியும் பள்ளி வேட்டை ஆடி குதித்து பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சி செண்டை மேளம் முழங்க நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற கேரள மக்கள் தங்களது தேவைகளை காதில் கூறி அருள்வாக்கு பெற்றனர். வேண்டுதல் நிறைவேற விழாவில் பங்கேற்ற பக்தர்கள் முத்தப்பனுக்கு தேங்காய், வெற்றிலை, பாக்கு, பச்சைப்பயறு, மீன், கருவாடு போன்றவற்றுடன் நீண்ட கத்தி மற்றும் தெண்ணங்கள் கொடுத்து வழிபட்டனர்.











Click it and Unblock the Notifications