பெண்ணின் குற்றச்சாட்டை... பாராட்டாக மாற்றி மொழிபெயர்த்த நாராயணசாமி... வைரலாகும் வீடியோ
புதுச்சேரி: ராகுல் காந்தியுடனான உரையாடலின்போது மீனவ பெண் ஒருவர் கூறிய புகாரை, புதுவை முதல்வர் நாராயணசாமி வேண்டுமென்ற தவறாக மொழிபெயர்த்தார் என்று பாஜக தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தமிழ்நாட்டுடன் சேர்த்து புதுச்சேரியிலும் வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலைக் கருத்தில் கொண்டு முக்கிய கட்சிகள் அனைத்தும், புதுவையில் தேர்தல் பிரச்சாரங்களைத் தொடங்கிவிட்டன.
இந்நிலையில், இன்று புதுச்சேரியில் ராகுல் காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதில் ஒரு பகுதியாக மாநிலத்திலுள்ள மீனவர்களுடன் அவர் உரையாடினார். அப்போது தான் மீனவ பெண் ஒருவர் கூறிய புகாரை, புதுவை முதல்வர் வேண்டுமென்ற தவறாக மொழிபெயர்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பெண் ஒருவர், "புயலுக்குப் பின் யாரும் எங்களுக்கு ஆதரவாக இல்லை, முதல்வர் (நாராயணசாமி) கூட எங்களை நேரில் வந்து பார்க்கவில்லை" என்று குற்றஞ்சாட்டினார். ஆனால், அப்பெண் கூறியதை ராகுல் காந்திக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நாராயணசாமி, "நிவர் புயலுக்குப் பின் முதல்வர் எங்களை நேரில் வந்து சந்தித்தார். மேலும். நிவாரணங்களையும் கொடுத்தார் என்று அந்தப் பெண் கூறுகிறார்" என்று தவறாக மொழிபெயர்த்தார்.
அரசியல் பரபரப்புக்கு நடுவே புதுச்சேரி வந்தார் ராகுல் காந்தி - உற்சாக வரவேற்பு அளித்த நாராயணசாமி
முதல்வர் நாராயணசாமி வேண்டுமென்றே தவறாக மொழிபெயர்த்ததாக பாஜக தலைவர்கள் விமர்சித்துள்ளனர். இதற்குப் பதில் அளித்துள்ள நாராயணசாமி, "நான் எப்போதும் தவறாக எதையும் கூறியதில்லை. ஏன் இப்படி தவறான குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறீர்கள்" என்று தெரிவித்தார். பெண்ணின் குற்றச்சாட்டைப் பாராட்டாக மாற்றி மொழிபெயர்த்த இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
புதுச்சேரியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதன் காரணமாக நாராயணசாமி தலைமையிலான அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.