ஆர்எஸ்எஸ்க்கு போட்டி.. புதுச்சேரியில் மதநல்லிணக்க மனித சங்கிலி -மின்துறை தனியார்மயத்துக்கு எதிர்ப்பு
புதுச்சேரி: அக்டோபர் 2 ஆம் தேதியான இன்று ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், இதனை எதிர்த்து மதசார்பற்ற கட்சிகள் நடத்தும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிராக முழக்கமிட்டனர்.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2 ஆம் தேதியான இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த முடிவு செய்தது. இதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிடகோரி சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு அண்மையில் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அக்டோபர் 2 ஆம் தேதி தமிழ்நாட்டின் 51 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டமிட்டது.
புதுச்சேரியில் இன்று ஆர்.எஸ்.எஸ். பேரணி - மனித சங்கிலி போராட்டத்தை முறியடிக்கும் எதிர்க்கட்சியினர்!
விடுதலை சிறுத்தைகள் பேரணி
இதற்கு போட்டியாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சமூக நல்லிணக்க பேரணியை தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் என அறிவித்தார். அவரது அறிவிப்புக்கு மதசார்பற்ற கட்சிகள், இடதுசாரி கட்சிகள், நாம் தமிழர், இஸ்லாமிய அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. நாளுக்கு நாள் திருமாவளவனின் பேரணிக்கான ஆதரவு பெருகி வந்தது.
அனுமதி மறுப்பு
இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள் அனுமதி மறுத்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட தடை, பெட்ரோல் குண்டுவீச்சு உட்பட பல்வேறு மாவட்டங்களில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி ஆர்.எஸ்.எஸ். ஊரவலகத்துக்கு அனுமதி வழங்க முடியாது என காவல்துறை விளக்கம் அளித்தது.
புதுச்சேரி
இதனை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நவம்பர் 11 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கியது. அதே நேரம் புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அரசு தடை விதிக்கவில்லை. இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு போட்டியாக புதுச்சேரியில் இன்று காலை மதசார்பற்ற கட்சிகள் சார்பில் மத நல்லிணக்க மனித சங்கிலி நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
மனித சங்கிலி
இதனை தொடர்ந்து இன்று காலை திமுக தலைமையில் மதநல்லிணக்க மனித சங்கிலி புதுச்சேரியில் நடைபெற்றது. அண்ணா சிலையில் இருந்து காமராஜர் சிலை வரை நடைபெற்ற இந்த மனித சங்கிலியில், சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான இரா.சிவா தலைமை தாங்கினார். இதில், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், திமுக, காங்கிரஸ், விசிக, இடது சாரிகள் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
மின்துறை தனியார்மயம்
இந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்குவதை கைவிடும் வரை புதுச்சேரியில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் போராட்டம் தொடரும் என சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா எச்சரிக்கை விடுத்தார்.