பீர் வாங்கி விட்டு காசு தராமல் வெடிகுண்டு வீசிச்சென்ற இளைஞர்கள்.. !
புதுச்சேரி: புதுச்சேரியில் மது பாட்டில்கள் வாங்கியதற்கு பணம் கேட்டதற்காக மதுக்கடை மீது ரவுடிகள் வெடிகுண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் அண்மைக்காலமாக வெடிகுண்டு கலாச்சாரம் தலை தூக்கி வருகிறது. ரவுடிகள் ஒருவருக்கொருவர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு சில மாதங்களில் மட்டும் 5 க்கும் மேற்பட்ட கொலைகள் நாட்டு வெடிகுண்டு வீசி நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி அருகே திருவண்டார்கோவிலில் பகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான மதுபானக் கடை ஒன்று உள்ளது. இங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் தங்களுக்கு தேவையான மதுபாட்டில்கள் வாங்கியுள்ளனர். அவர்களிடம் வாங்கிய மது பாட்டில்களுக்கு கடையின் காசாளர் பாஸ்கர் பணம் கேட்டுள்ளார்.
அப்போது அந்த இளைஞர்களில் ஒருவர், நாங்களே பெரிய ரவுடி எங்களிடம் பணம் கேட்பதா? என்று கூறி தனது கையில் இருந்த இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை மதுக்கடையின் சுவர் மீது வீசினார். இதில் அந்த குண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் மதுக்கடைக்கு வந்திருந்த மதுப்பிரியர்கள் நாலாபுறமும் அலறியடித்தபடி ஓடினர். இதனால் அங்கு மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருபுவனை காவல்நிலைய போலீசார், மதுக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். போலீஸார் நடத்திய விசாரணையில், மதுக்கடை மீது நாட்டு வெடிகுண்டை வீசியது, திருபுவனை பகுதியை சேர்ந்த ரவுடிகளான விக்னேஷ், கதிர், முகேஷ் ஆகிய மூன்று இளைஞர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் ள் மூன்று பேரும் பண்ணக்குப்பம் ஏரிக்கரையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸார் குறிப்பிட்ட அந்த பகுதிக்கு சென்று பதுங்கியிருந்த 3 பேரையும் சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும்,
அவர்கள் தப்பிச்செல்ல முயன்றனர்.
உடனே சுதாரித்துக் கொண்ட உதவி ஆய்வாளர் ராஜசேகர் தற்காப்புக்காக வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து ரவுகளை நோக்கி நீட்டினார். இதையடுத்து அவர்கள் நகராமல் அங்கேயே நின்றனர். பின்னர் 3 பேரும் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 கத்திகள், ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மது பாட்டில்கள் வாங்கியதற்கு பணம் கேட்டதற்காக மதுக்கடை மீது வெடிகுண்டு வீசிய சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.