"லிஃப்ட்லாம் கொடுத்த..வாப்பா ஒரு பீர் அடிச்சிட்டு போலாம்”- நூதன முறையில் திருட்டு- வலைவீசும் போலீஸ்!
புதுச்சேரி: ரயில்வே போலீஸ் என அறிமுகப்படுத்திக்கொண்டு போதை வாலிபரிடம் பைக்கை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த வினோத்குமார் என்ற இளைஞரிடம் மதுபான பாரில் அறிமுகமான நபர், நம்பும் வகையில் பேசி அவரிடம் பைக்கை திருடிச் சென்றுள்ளார்.
பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்பின் தெரியாதவர்களின் பேச்சை நம்பி ஏமாற வேண்டாம் என போலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சும்மா சும்மா அபாய சங்கிலியை இழுக்காதீங்க! பைலட் வீரச்செயலை காட்டி ரயில்வே அமைச்சகம் வேண்டுகோள்
காவலாளி
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் (28), செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றில் காவலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவர் கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள மதுக்கடையில் மது அருந்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவருக்கு அருகில் அமர்ந்து ஒருவர் மது அருந்தியுள்ளார்.
அந்த நபர், வினோத்குமாரிடம், தான் விழுப்புரம் ரயில்வே போலீசில் வேலை செய்வதாக அறிமுகம் செய்துகொண்டுள்ளார். பின்னர் மெதுவாக வினோத்குமாரிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
ரயில்வேயில் வேலை
என்ன வேலை செய்கிறாய் என அந்த நபர் கேட்டதற்கு, காவலாளியாக வேலை செய்து வருவதாக வினோத்குமார் கூறியுள்ளார். இதையடுத்து அந்த நபர், விழுப்புரம் ரயில் நிலையத்தில் காவலாளியாக வேலை வாங்கி தருகிறேன் எனக் கூறியுள்ளார்.
பின்னர், போதை மயக்கத்தில் இருந்த வினோத்குமாரிடம், அந்த நபர் புதுச்சேரி ரயில் நிலையத்தில் எனது நண்பர் ஒருவரிடம் பணம் வாங்க வேண்டிள்ளது. என்னை அங்கு அழைத்து செல்லமுடியுமா எனக் கேட்டுள்ளார்.
திரும்ப குடிக்கலாம்
அதற்கு சரி எனக் கூறிய வினோத்குமார், தனது மோட்டார் சைக்கிளில் அவரை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். போகும் வழியில் அந்த நபர், "எனக்கு லிஃப்ட் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி. வாங்க பாருக்கு போய் ஒரு பீர் குடிச்சிட்டு போகலாம்" என வினோத்குமாரை அழைத்துள்ளார்.
இதையடுத்து, ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள பார் ஒன்றிற்கு சென்று இருவரும் குடித்துள்ளனர். குடித்துக் கொண்டிருக்கும்போதே, "என் ஃப்ரெண்டு வெய்ட் பண்றாரு. அவர் எனக்கு பத்தாயிரம் ரூபா தரணும். உன் வண்டிய கொடுத்தா போய் வாங்கிட்டு வந்துடுவேன்" எனக் கேட்டுள்ளார்.
ஆளையே காணோம்
அந்த நபர் சொன்னதை எல்லாம் உண்மை என நம்பிய வினோத்குமார் அவரிடம் வண்டி சாவியை கொடுத்துள்ளார். வினோத்தின் டூவீலரை எடுத்துச்சென்ற அந்த நபர் நீண்டநேரமாகியும் திரும்பி வரவில்லை என்றதும் வெளியே சென்று பார்த்துள்ளார். அவர் வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை.
அப்போதுதான் வினோத்குமார் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். அடித்த போதை எல்லாம் பட்டென இறங்கிய நிலையில், இது குறித்து ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரில் மது அருந்தும்போது வேலை வாங்கித் தருவதாகக் கூறி நம்பவைத்து ஏமாற்றி வண்டியை திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.