இந்தியாவே இளைஞர்களைப் போல உத்வேகமாக உள்ளது - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
புதுச்சேரி: நாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதில் இளைஞர்கள் முக்கிய பங்காற்றுகிறார்கள் எனவும், நாடே இளைஞர்கள் போல் உத்வேகத்துடன் இருக்கிறது என புதுச்சேரியில் நடைபெற்று வரும் தேசிய இளைஞர் தின திருவிழாவை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
புதுச்சேரியில் தேசிய இளைஞர் விழா இன்று தொடங்கி வருகிற 16-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த விழாவை பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி வந்து தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக பிரதமர் மோடியின் வருகை ரத்து செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி இளைஞர் விழாவும் ஆன்லைன் மூலம் 2 நாட்கள் மட்டுமே நடத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பிரதமர் நரேந்திரமோடி
அதன்படி இன்று காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை தேசிய இளைஞர் விழாவின் தொடக்கவிழா காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு தேசிய இளைஞர் விழாவை தொடங்கி வைத்தார். மேலும் புதுவை கருவடிக்குப்பத்தில் ரூ.23 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தையும், புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.122 கோடியில் தொடங்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தையும் திறந்து வைத்தார்.

உத்வேகத்துடன் இளைஞர்கள்
பின்னர் நிகழ்ச்சியில் இளைஞர்கள் மற்றும் விருந்தினர்களிடையே பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் உள்ள இளைஞர்கள் உத்வேகத்துடன் செயல்படுவதைப் போலவே இந்தியாவும் உத்வேகத்துடன் செயல்பட்டு வருவதாக கூறினார். மேலும் விவேகானந்தர் கூறியதைப்போல நாட்டை முன்னெடுத்துச் செல்வதில் இளைஞர்கள் பங்கு உள்ளது எனவும், அவரை இளைஞர்கள் முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும் என பேசினார். நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய பிரதமர், மகாகவி பாரதியாரையும் நினைவு கூர்ந்தார்.

அடுத்தகட்டத்தில் இந்தியா
நாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதில் இளைஞர்கள் முக்கிய பங்காற்றுகிறார்கள் எனவும், நாடே இளைஞர்கள் போல் உத்வேகத்துடன் இருக்கிறது எனவும் கூறிய பிரதமர், சிறு, குறு நடுத்தர தொழில்துறை தொழில்நுட்ப வளாகம் புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ளது எனவும், காமராஜர் மணிமண்டபம் இளைஞர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள உதவும் எனப் பேசினார்.

விருந்தினர்கள் பங்கேற்பு
இந்த விழா புதுவை அண்ணா சாலையில் உள்ள ரெசிடன்சி ஓட்டலில் காணொலி காட்சி மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications