எல்லாத்தையும் அப்பா பைத்தியம் சுவாமிகள் பாத்துக்குவார்... தைரியமாக களமிறங்கும் ரங்கசாமி
புதுச்சேரி: எல்லாத்தையும் அப்பா பைத்தியம் சுவாமிகள் பார்த்துக்கொள்வார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை ரங்கசாமிக்கு உண்டு. அந்த நம்பிக்கையில்தான் ஒவ்வொரு முறை தேர்தலில் போதும் அப்பா பைத்தியம் சுவாமிகளை வேண்டிக்கொண்டு களமிறங்குவார். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் முதல்வராக முடியுமா என்ற சிறு குழப்பம் ஏற்பட்ட நிலையில் அசத்தலாக அனைவரையும் சமாளித்து அனைத்து எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் துணை நிலை ஆளுநரிடம் அளித்துள்ளார் ரங்கசாமி.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் என்ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதில் என். ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வென்றுள்ளது. அதிமுக போட்டியிட்ட 5 தொகுதிகளில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பதுதான் சோகம்.
முதல்வராக பதவியேற்க என். ரங்கசாமி தயாராகி வந்த நிலையில் எம்எல்ஏக்கள் சேர்ந்து முதல்வரை தேர்வு செய்வார்கள் என்று பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா கூறியிருந்தார். இதனால் என். ரங்கசாமி முதல்வராக பாஜக முட்டுக்கட்டை போடுகிறதா என்ற சந்தேகம் எழுந்தது எனினும் சுயேட்சைகள் 6 பேர் வெற்றி பெற்றிருப்பதால் அவர்களின் ஆதரவோடு ரங்கசாமி ஆட்சியமைக்க முயற்சி செய்யலாம் என்ற கருத்தும் நிலவியது.

துணை நிலை ஆளுநரிடம் கடிதம்
பரபரப்பான சூழ்நிலையில் மாலையில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் கூட்டம் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார் என். ரங்கசாமி. இதனையடுத்து புதுச்சேரியில் ஆட்சி அமைக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் ரங்கசாமி. அப்போது என் ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். முன்னதாக பாஜக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதமும் ஆளுநரிடம் வழங்கப்பட்டது.

16 எம்எல்ஏக்கள் ஆதரவு
என். ரங்கசாமியிடம் பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கடிதம் அளித்தனர். இதனையடுத்து என்.ரங்கசாமி முதல்வராவது உறுதியானது. என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி அரசு புதுச்சேரியில் அமைய உள்ளது.

பதவியேற்பது எப்போது
செய்தியாளர்களைச் சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், புதுச்சேரியில் ஆட்சி அமைக்க என்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி உரிமை கோரி கடிதம் அளித்துள்ளதாகவும், 10 என்.ஆர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், 6 பாஜக உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கடிதம் கொடுத்துள்ளதாகவும், எந்தத் தேதியில் அவர்கள் பதவி ஏற்க விரும்புகிறார்களோ அப்போது நேரம் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அப்பா பைத்தியம் ஆசி உண்டு
தனக்கு எப்போதும் அப்பா பைத்தியம் சுவாமிகளின் ஆசி உண்டு என்று ரங்கசாமி கூறி வருவார். தேர்தல் நடைபெறும் முன்பாகவும் வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பாகவும் அப்பா பைத்தியம் சுவாமி கோவிலுக்கு வந்து வழிபட்டு சென்றார். அவரை வணங்கினால் வெற்றிகள் தேடி வரும் என்பது ரங்கசாமியின் அசைக்க முடியாத நம்பிக்கை. அவரது நம்பிக்கை வீண் போகவில்லை.

1990 முதல்
கடந்த 90ஆம் ஆண்டு முதல் முறையாக தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்டு ரங்கசாமி தோல்வி அடைந்தார். அப்போது தமிழகத்தைச் சேர்ந்த அப்பா பைத்தியம் சாமியார் புதுச்சேரி வந்திருந்தார். அவரைப் போய் பார்த்தார் ரங்கசாமி, அப்போது ஓராண்டில் அமைச்சராவாய் என்று ஆசி வழங்கினார். சொன்னது போலவே 1991ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது அதில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரங்கசாமி அமைச்சரானார்.

சாமிகள் உத்தரவு
அது முதலே ரங்கசாமிக்கு எல்லாமே அப்பா பைத்தியம்தான். தனது சட்டை பாக்கெட்டில் அவருடைய படத்தை வைத்திருப்பார்.
கடந்த 2000ஆம் ஆண்டு சாமிகள் ஜீவசமாதி அடைந்தார். அதன் பின்னர் சேலம் சூரமங்கலத்திலுள்ள அவரது சமாதிக்கு செல்ல தொடங்கினார். சிலை முன்பு அமர்ந்து உத்தரவு பெற்ற பிறகே அனைத்து காரியத்தையும் செய்வார்.

புதுச்சேரியில் கோவில்
புதுச்சேரி வீமக்கவுண்டன்பாளையத்தில் கோயில் கட்டி வணங்கி வருகிறார். எந்த பிரச்சினையாக இருந்தாலும் சாமி பார்த்துக்குவார் என்பதே இவரது அசைக்க முடியாத நம்பிக்கை. இப்போதும் அவரது ஆசியுடனே முதல்வராக பதவியேற்கப் போகிறார் ரங்கசாமி.












Click it and Unblock the Notifications