கொரோனாவுக்காக பார் மூட வேண்டாமே.. கெஞ்சிய அமைச்சர்.. ஓகே சொன்ன நாராயணசாமி!
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், சினிமா தியேட்டர், வணிக வளாகங்கள், ஜிம், உள்ளிட்டவற்றை மூடுவதற்கு முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் நாராயணசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் உயர்மட்டக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், வருவாய் துறை அமைச்சர் ஷாஜகான், கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன்,
சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி, தலைமை செயலாளர் அஸ்வனி குமார், சுகாதாரத்துறை இயக்குனர், செயலர் உள்ளிட்ட அனைத்து அரசு செயலர்கள் பங்கேற்றனர்.
சரக்கு உள்ள போறதுக்கு முன்னாடியே கன்பியூஷன்.. திருப்பூரில் மதுக்கடையை மொய்த்த குடிமகன்கள்- வீடியோ
பாதிப்பு இல்லை
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. புதுச்சேரியில் இதுவரை யாரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை. பிரான்ஸ், துபாய், அபுதாபி, மலேசியா, சவுதி அரேபியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். புதுச்சேரி மாநில எல்லைப் பகுதி, பேருந்து நிலையம், விமானம் நிலையம், ரயில் நிலையங்களில் நிலையான மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பள்ளிகள் கல்லூரிகள் மூடல்
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளை வரும் 31 ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு நடைபெறும் மாணவர்களுக்கு விடுமுறை பொருந்தாது. வணிக வளாகங்கள், மால், ஜிம், சண்டே மார்க்கெட் உள்ளிட்டவையும் வரும் 31 ஆம் தேதி வரை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் பொது கூட்டங்கள் நடத்தக்கூடாது. திருமண நிகழ்ச்சிகளில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும்.
விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்
விடுறையில் உள்ள பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள் பொது இடங்கள் மற்றும் கிராமப் பகுதிகளுக்கு சென்று கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு வருவாய்த்துறை மூலம் ரூபாய் 11 கோடியும், மருத்துவத்துறை மூலம் ரூபாய் 7.5 கோடி என மொத்தம் 17.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
கெஞ்சிய அமைச்சர்கள்
இதனையடுத்து புதுச்சேரியில் மதுக்கடைகள் மூடப்படுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் நாராயணசாமி, மதுக்கடைகளும் மூடப்படும் என அறிவித்தார். உடனே முதலமைச்சர் நாராயணசாமி அருகில் அமர்ந்திருந்த கல்வித்துறை அமைச்சர் கமலகண்ணனும், சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமியும் மதுக்கடைகளை மூட வேண்டாம் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு முதலமைச்சர் நாராயணசாமி, கல்வித்துறை அமைச்சர் கமலகண்ணனை பார்த்து உங்களுக்கு பார் உள்ளதா? மதுக்கடைகளை மூடுவதால் உங்களுக்கென்ன பாதிப்பு என சிரித்துகொண்டே கேள்வி கேட்டார். இதனால் செய்தியாளர் சந்திப்பில் சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மதுபானக்கடைகளை மூடுவது குறித்து ஆலோசித்து இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.