இது கொரோனா அல்ல கர்மா.. மாமிசத்தால்தான் கொரோனா வந்ததா? .. என்ன சொல்கிறார் கிரண்பேடி!
புதுச்சேரி: இது கொரோனா அல்ல. இது கர்மா என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியா உள்ளிட்ட 160 நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா வைரஸால் இதுவரை லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸின் கொடூரத்தை உணர்ந்த பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒருபுறம் கொரோனா வைரஸ்க்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியிலும் மருத்துவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியின் மாஹே பிராந்தியத்தில் மூதாட்டி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், மதுபானக் கடைகள், சுற்றுலாத் தலங்கள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களும் வரும் மார்ச் 31 ஆம் தேதி மூடப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் உள்ள மக்கள் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து காத்துக்கொள்ள வழி தேடி வருகின்றனர். இச்சூழலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கொரோனா வைரஸ் பற்றி சமூக வலைத்தளத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், கூண்டில் மனிதர்கள் முகக்கவசம் அணிந்தபடி இருக்க, விலங்குகள் வெளியே சுதந்திரமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள கிரண்பேடி, அதன் கீழே இது கொரோனா அல்ல. இது கர்மா என்ற வாசகத்தை எழுதியுள்ளார்.
அதைத்தொடர்ந்து அவர் தெரிவித்துள்ள கருத்துகளில், நாம் யாரை உட்கொள்கிறோம் என்ற பொறுப்பை எவ்வாறு ஏற்பது? இது பாதிப்பில்லா தேர்வை பற்றியதுதான். அத்துடன் அகிம்சையை பயிற்சி செய்வது வார்த்தையில் மட்டுமில்லாமல், செயலிலும் உணவிலும்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
கிரண்பேடியின் இந்த கருத்து மூலம், மாமிசத்தை உட்கொள்வதால்தான் கொரோனா போன்ற கொடிய நோய்கள் வருகிறது. அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டுமென மறைமுகமாக தெரிவிக்கிறாரோ என்று தோன்றுகிறது. மேலும் புதுச்சேரி ராஜ்நிவாசில் கிரண்பேடி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றதிலிருந்து அசைவ உணவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.