"சைவமும், வைணவமும் இந்து மதத்தின் அடையாளங்கள் தான்" ராஜராஜ சோழன் விவகாரத்தில் தமிழிசை செளந்தரராஜன்!
புதுச்சேரி: சைவமும், வைணவமும் இந்து மதத்தின் அடையாளங்கள் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே மின்துறை ஊழியர்கள் போராட்டம் காரணமாக புதுச்சேரியில் அசாதாரண சூழ்நிலை நிலவியது.
இதன் பின்னர் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னர், தீபாவளி வரை போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழிசை செளந்தரராஜன் பேட்டி
இந்த நிலையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், மின்துறை ஊழியர்களுக்கு என்ன கோரிக்கைகள் இருந்தாலும், அறவழியில் போராடலாம். தற்போது போராட்டத்தை வாபஸ் பெற்றது மகிழ்ச்சி. அரசு எந்த முடிவு எடுத்தாலும், மக்கள் நலனுக்காக தான் எடுக்கப்படும். பல மாநிலங்களில் மின்துறை தனியார்மயம் செய்யப்பட்டதால், மக்களுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்
அதேபோல் மின் திருட்டு உள்ளிட்ட பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு 24 மணி நேரமும் முழுமையான மின்சாரம் மக்களுக்கு கிடைக்கும். மின்துறை தனியார்மயம் செய்யப்படுவதால், ஊழியர்களின் பணி பாதிக்கப்படாது என்று உறுதியளிக்கிறேன். அவர்கள் எல்லோரும் எந்த நிலையில் பணியாற்றுகிறார்களோ, அது பாதுகாக்கப்படும். மக்கள் நலன் சார்ந்து, ஊழியர்களின் நலன் சார்ந்து எடுக்கப்பட்ட முடிவு இது. ஊழியர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் பணிகள், பதவி உயர்வு என எந்தப் பிரச்சினையும் வராது. முதலமைச்சர் ரங்கசாமியுடன் சேர்ந்து தான் முடிவுகள் எடுக்கப்படுகிறது.

புதுச்சேரி மாடல்
மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தான் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினேன். புதுச்சேரி நிர்வாகம் நன்றாக செயல்பட்டு வருகிறது. இன்னும் சொல்லப்போனால், புதுவை மாடல் மிகச்சிறந்த மாடலாக இருக்கப் போகிறது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எந்தப் போராட்டத்தாலும் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது. மின்துறை ஊழியர்களுடனும் சுமூகமான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. மின்துறை ஊழியர்கள் எதற்காக தனியார்மயம் செய்யப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இது மக்களுக்கு நிச்சயம் பலன் தரும் என்று தெரிவித்தார்.

ராஜராஜ சோழன் பற்றி கருத்து
தொடர்ந்து ராஜராஜ சோழன் விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, நெடுங்காலமாக தமிழ்நாட்டில் அடையாளங்கள் மறைக்கப் பார்க்கிறார்கள். இனிமேல் அது நடக்காது. இதற்கு எல்லோரும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவிப்போம். தமிழர்களின் அடையாளம் இறை வழிபாடு. சிவனையும் வழிபட்டுள்ளார்கள், பெருமாளையும் வழிபட்டுள்ளார்கள். கோயிலையும் கட்டியுள்ளார்கள். சைவமும், வைணவமும் இந்து மதத்தின் அடையாளங்கள். இதனை மறைக்க முடியாது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications