ஆளுநரின் செயல் கருப்பு நாள்! பாஜகவை நம்பினால் நடுத் தெரு தான்! புதுச்சேரி ’மாஜி’ நாராயணசாமி தாக்கு!
புதுச்சேரி : தமிழ்நாடு ஆளுநர் ரவியின் நேற்றைய சட்டமன்ற செயல்பாடு ஒரு கருப்பு நாள் என்றும், அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்ட ஆளுநர் ரவி பதவி விலக வேண்டும் அல்லது குடியரசு தலைவர் ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, "நேற்று தமிழக சட்டபேரைவில் நடைபெற்ற நிகழ்வு அனைவரும் தலைகுனியும் செயலாகும். சிறந்த தலைவர்கள் ஆளுநராக இருந்துள்ளனர்.
அவர்கள் இந்திய அரசியலமைப்புக்கு ஏதுவாக தங்களின் கடமைகளை செய்துள்ளனர். ஆனால் ஆர்.என்.ரவி ஆளுநராக பொறுப்பேற்று தமிழக அரசின் திட்டங்களையும், தமிழக அரசையும் வெளிப்படையாக விமர்சனம் செய்து வந்தார்.
தமிழ்நாட்டு மக்கள் எழுச்சிக்கு முன்னரே ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும்: டி.ராஜா எச்சரிக்கை
ஆளுநரின் செயல்
அதனுடைய வெளிப்பாடுதான் நேற்று ஆளுநர் உரை வாசிக்கப்பட்ட நேரத்தில், தமிழக அரசு ஆளுநர் உரையை அங்கீகரித்து முதலமைச்சர் அந்த கோப்பை பெற்று அதன்பின் ஆளுநர் அதை படிக்கும்போது, இந்திய அரசியலமைப்புக்கு முரணாகவும், சட்டமன்ற மாண்புகளை குலைக்கும் விதமாக செயல்பட்டுள்ளார். நேற்றைய தினம் ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் நடந்துகொண்ட விதம் இந்திய ஜனநாயகத்திற்கு எதிராகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், மக்கள் நம்பிக்கையை இழக்கும் வகையில் செயல்பட்டுள்ளார் என்றும், ஆளுநரின் செயல் கண்டிக்கத்தக்கது.
ஜனநாயக படுகொலை
இந்தியாவில் இதுபோன்று எந்த மாநிலத்திலும் ஜனநாயக படுகொலை மற்றும் சட்டமன்ற அவமதிப்பு நடந்ததில்லை. ஆளுநர் உரையில் தனது சொந்த கருத்தை பதிவு செய்வது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை. ஆளுநர் உரையில் சொந்த கருத்தை பதிவு செய்வதற்கு ஆளுநர் ரவிக்கு அதிகாரம் இல்லை. அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அவமதித்துள்ளார். தேசிய கீதம் பாடுவதற்கு முன்பு பேரவையைவிட்டு வெளியேறி தேசிய கீதத்தை அவமதித்துள்ளார்.பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் கைப்பாவையாக நேற்று ஆளுநர் செயல்பட்டுள்ளார்.
கருப்பு நாள்
அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்ட ஆளுநர் ரவி பதவி விலக வேண்டும் அல்லது குடியரசு தலைவர் ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இனி ஒரு நிமிடம் கூட ஆளுநர் பதவியில் இருக்க தகுதியற்றவர் ரவி. எனவே அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். ஆளுநர்கள் மூலம் மாநில அரசுகளுக்கு தொல்லை கொடுக்கும் மோடி அரசு விரைவில் தூக்கியெறியப்படும். அப்போது மாநிலங்கள் சுதந்திரமாக செயல்படும். ஆளுநர் ரவியின் நேற்றைய சட்டமன்ற செயல்பாடு ஒரு கருப்பு நாள்
போதைப்பொருட்கள்
புதுச்சேரியில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் தாராளமாக கிடைப்பதாகவும, இதனால் இளைஞர் தவறான வழிக்கு சென்று மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்காவிட்டால், மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்
என்.ஆர் காங்கிரஸ் - பாஜக
இரண்டு வருடம் என்.ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி முடிய போகும் நிலையில் ஒரு தேர்தல் வாக்குறுதி கூட நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் கூட்டணிக்கு ஆதரவு தரும் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக என்.ஆர் காங்கிரஸார் எதற்கு போராட்டம் நடத்தினர் என தெரியவில்லை. ஆளும் கட்சியே ஆளும் கட்சிக்கு ஆதரவு தரும் சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்படி ஏனாம் சட்டமன்ற உறுப்பினர் தவறு செய்திருந்தால் அவரிடம் விசாரணை நடத்தலாம்.
இங்கு ஆட்சி நடைபெறுவது போல் தெரியவில்லை. கோமாளிகள் எல்லாம் ஒன்று சேர்ந்துள்ளது போல் தெரிகிறது.இவர்கள் செய்வதை பார்த்து புதுச்சேரி மக்கள் நொந்துபோய் உள்ளனர். யார் யார் பா.ஜ.கவிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்களோ அவர்கள் நடுரோட்டில் நிற்கும் நிலைதான் ஏற்படும்" என்றார்.