அடுத்த ஷாக்.. பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு.. கிடுகிடுவென அதிகரித்த புதுச்சேரி பாண்லே நிறுவனம்!
புதுச்சேரி: புதுச்சேரி அரசு நிறுவனமான பாண்லே மூலம் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை முதல் பால் விற்பனை விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி லிட்டருக்கு ரூ.4 வரை கிடுகிடுவென உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் ஷாக் அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசு நிறுவனமாக ஆவின் உள்ளது. சமீபத்தில் தொடர்ந்து ஆவின் பால் விலை மற்றும் பிற பொருட்களின் விலைகள் என்பது தொடர்ந்து அதிகரிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்ப தெரிவித்தனர். இருப்பினும் விலை ஏற்றம் நடைமுறையில் உள்ளது.
இது ஒருபுறம் இருக்க தற்போது புதுச்சேரி அரசு நிறுவனமான பாண்லே பால் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியில் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது பெரிய ஷாக்கை ஏற்படுத்தி உள்ளது.
ஆளுநரின் செயல் கருப்பு நாள்! பாஜகவை நம்பினால் நடுத் தெரு தான்! புதுச்சேரி ’மாஜி’ நாராயணசாமி தாக்கு!
பாண்லே பால் நிறுவனம்
புதுச்சேரியில் அரசு நிறுவனமாக பாண்லே உள்ளது. பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை கொள்முதல் செய்து நுகர்வோருக்கு விற்பனை செய்து வரும் பணியை பாண்லே மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் பால் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. போராட்டம் தொடங்கியது. இதனால் வேறு வழியின்றி பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.34 ஆக இருந்த நிலையில் ரூ.3 உயர்த்தி ரூ.37 ஆக அதிகரிக்கப்பட்டது.
லிட்டருக்கு ரூ.4 உயர்வு- நாளை அமல்
இந்த கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதால் விரைவில் பால் விலையும் உயர்த்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் பாண்லே பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி உயர்த்தப்பட்ட பால் விற்பனை விலை நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.
பால் பாக்கெட்டுகளின் புதிய விலை
இதுபற்றி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தைய்யா வெளியிட்ட உத்தரவில், ‛‛நீல நிற பாக்கெட் (டோன்ட் மில்க்) ரூ.42ல் இருந்து ரூ.46க்கும், பச்சை நிற பாக்கெட் (ஸ்பெஷல் டோன்ட் மில்க்) ரூ.44ல் இருந்து ரூ.48க்கும், ஆரஞ்சு நிற பாக்கெட் (ஸ்டேன்டர்ட் மில்க்) ரூ.48-ல் இருந்து ரூ.52-க்கும் உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக இரு பாக்கெட் பால் அறிமுகமாகிறது. டபுள் டோன்ட் மில்க் என மஞ்சள் நிற பால் பாக்கெட் ரூ.42க்கும், புல் கீரிம் பால் என்ற சிவப்பு நிற பாக்கெட் பால் ரூ.62-க்கும் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது'' என கூறப்பட்டுள்ளது.
மக்கள் ஷாக்
இந்த விலை உயர்வால் பாண்லே நிறுவனத்தின் பால் பயன்படுத்தி வரும் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலைகள் விண்ணை தொட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருளான பால் விலையும் உயர்ந்துள்ளதே என அவர்கள் விரக்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.