கொரோனா எதிரொலி.. 144 தடை.. பிற மாநில போக்குவரத்து துண்டிப்பு.. தனித் தீவானது புதுச்சேரி!
புதுச்சேரி: கொரோனா வைரஸ் எதிரொலியாக 144 தடை உத்தரவு அமலில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில், மாநில எல்லைகள் முழுவதுமாக மூடப்பட்டதால், பிற மாநிலங்களில் இருந்து புதுச்சேரி மாநிலம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களுக்கு பேருந்துகள் செல்லாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், அதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
புதுச்சேரி மாநில அரசும் பல்வேறு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதற்கு மாநில மக்களும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.
கொரோனா வந்தாச்சு.. சீரியல்கள் நின்னாச்சு.. சன் டிவியில் இனி சனி தோறும்
144 தடை
இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நேற்று இரவு 9 மணி முதல் வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தடை உத்தரவு அமலில் உள்ளது. மேலும் இன்று முதல் வருகிற 31 ஆம் தேதி வரை வெளிமாநில பேருந்து, லாரி, கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் புதுச்சேரி யூனியன் பிரதேச எல்லைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஓரளவுக்குப் போகலாம்
பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வர அனுமதி உள்ள உள்ளூர் வாகனங்கள் புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் அதாவது புதுச்சேரியில் இருந்து பாகூர், நெட்டப்பாக்கம், மதகடிப்பட்டு, திருக்கனூர், காலாப்பட்டு போன்ற பகுதிகளுக்கும், காரைக்காலில் இருந்து அம்பகரத்தூர், விழுதியூர் போன்ற பகுதிகளுக்கும் வாகனங்கள் மட்டுமே செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களுக்கு தடை இல்லை
அதேபோல் அரசு வாகனங்களும், அத்தியாவசிய பொருட்களான பால், உணவுப்பொருட்கள், காய்கறிகள், மளிகை பொருட்கள், மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் கொண்டு வரும் வாகனங்கள் அதற்குரிய ரசீதுகளை காண்பித்தால் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி எல்லைக்குள் பிற மாநில வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதால், புதுச்சேரி - தமிழகத்துடனான தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
பாதிப்பு
மேலும் தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கும், புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி புதிய பேருந்துநிலையத்தில் ஒருசில உள்ளூர் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் புதுச்சேரி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகின்றது.
கிரண்பேடி அறிவுறுத்தல்
இதனிடையே புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பொதுமக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், பொதுமக்கள் முக்கியமான காரணமின்றி வெளி இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி அரசு எடுக்கும் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கூடுமான வரை நாம் சமூகத்தில் இருந்து விலகியே இருக்க வேண்டும். அத்தியாவசிய தேவை ஏற்பட்டால் மட்டுமே கடைகளுக்கு செல்லலாம்.
போதிய இடைவெளி அவசியம்
அவ்வாறு செல்லும் போது குறிப்பிட்ட தூர இடைவெளியில் சமூகத்தை விட்டு விலகியே இருக்க வேண்டும். பொருட்களை வாங்கி முடித்த பின்னர் நாம் நேராக வீட்டிற்கு வந்து விட வேண்டும். தேவையில்லாமல் பொது இடங்களில் ஒன்று கூட வேண்டாம். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேறவும் வேண்டாம் என கிரண்பேடி வலியுறுத்தியுள்ளார்.