புதுச்சேரியில் ஊரடங்கில் தளர்வு.. தொழிற்சாலைகள் இயங்க அனுமதி.. முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் ஐடி நிறுவனங்கள் உட்பட முக்கியமான துறைகள் நாளையில் இருந்து 50 சதவீத ஊழியர்களை கொண்டு இயங்கலாம் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 20) முதல் ஐடி நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களை கொண்டு இயங்கலாம் என்றும், மருத்துவம், உணவகம், விவசாயம், 100 நாள் வேலை, கட்டுமானப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பணிகள் சமூக இடைவெளியுடன் நடைபெறுவதற்கு முதல்வர் நாராயணசாமி அனுமதி அளித்துள்ளார்.
மேலும் வரும் 3 தேதி வரை உள்ளூர் மற்றும் வெளி மாநில போக்குவரத்திற்கான தடை தொடரும் முதலமைச்சர் நாராயணசாமி தகவல் வெளியிட்டுள்ளார்..
சட்டப்பேரவையில் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி,புதுச்சேரியில் கொரோனா பாதிப்புக்குள்ளான 4 பேர் சிகிச்சையிலிருந்த நிலையில், இன்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 ஆக குறைந்துள்ளது.
தற்போது புதுச்சேரி மாநிலத்தில் 3,045 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. மத்திய அரசின் விதிமுறைகளின்படி, புதுச்சேரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் 28 நாட்களுக்கு முடக்கப்படும். கொரோனா பரவாமல் தடுக்க நாம் இந்த உத்தரவை கடைபிடிக்க வேண்டும்.
மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, நாளை (ஏப்ரல் 20) முதல் விவசாயிகள் விவசாயத் தொழிலை மேற்கொள்ளலாம். விதை, உரக்கடைகள் திறந்திருக்கும். விளைபொருட்களை மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வர அனுமதி தேவையில்லை. இதே போல, கட்டுமானப் பணிகள், எலக்ட்ரீஷியன், தச்சர்கள், பிளம்பர்கள் தொழில் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மீன்பிடித் தொழிலுக்கு நமது மாநிலத்தில் தடைக்காலம் இருந்தாலும் கூட, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஐடி, தொலைதொடர்பு நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படலாம். அரசு அலுவலகங்கள் அனைத்தும் செயல்படும். அங்கு 33 சதவீதம் பணியாளர்கள் பணியாற்றுவர்.
அரசுப் பணியாளர்கள் பணிக்கு வரும் போது முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வாகனங்களில் இருவர் வருவதைத் தவிர்க்க வேண்டும். தொழிற்சாலைகள் படிப்படியாகவே உற்பத்தியைத் தொடங்க வேண்டும். அங்கு பணிக்கு வரும் தொழிலாளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்வதுடன், கிருமி நாசினி, முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்,.
தொழிற்சாலையை சுத்தமாக பராமரிக்க வேண்டும். வெளிமாநிலத்திலிருந்து யாரையும் வேலைக்கு கொண்டு வரக் கூடாது. புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி. தங்கி பணிபுரியும் மற்ற மாநிலத்தவருக்கு அனுமதி உண்டு. தொழிலாளிகள் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதியில்லை.
தொழிற்சாலை உரிமையாளர்கள், தொழிலாளர்களை தொழிற்சாலைகளுக்கு பக்கத்தில் வைத்து பராமரித்து, வேலை வாங்க வேண்டும். இந்த விதிமுறைகளை கடைபிடித்தால்தான் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்படும். இல்லையெனில் அனுமதி கிடையாது. மீறி செயல்பட்டால் மூடப்படும்.
கொரோனா தொற்று நோய்க்கான மருத்துவ உபகரணங்கள், வெண்டிலேட்டர்கள், மானிட்டர்கள், மருத்துவ கவச உடைகள், முகக்கவசங்கள், தேவையான மருந்துகள், பரிசோதனை கருவிகள் போதுமான அளவில் கிடைக்கவில்லை. மத்திய அரசு தேவைப்படும் அளவுக்கு கொடுக்கவில்லை. அவற்றை மாநில அரசுகளே இறக்குமதி செய்ய மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்.
கொரோனா தொற்றுக்கான மருத்துவ உபகரணங்களை கொண்டுவர ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இக்கட்டான சூழல் நிலவும் இக்காலகட்டத்தில், மத்திய அரசு மருத்துவ உபகரணங்களுக்கான ஜிஎஸ்டி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதன் மூலம் மாநிலங்கள் மருத்துவ உபகரணங்களை அதிகளவில் வாங்க ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என நாராயணசாமி தெரிவித்தார்.