புதுச்சேரியில் பிறப்பித்த வேகத்தில் திரும்ப பெறப்பட்ட ஊரடங்கு! நாராயணசாமி திடீர் அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையையொட்டி வருகின்ற திங்கட்கிழமை முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்திருந்தார். ஆனால் அது வாபஸ் பெறப்படுவதாக இன்று இரவு மறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. ஏற்கனவே பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மார்ச் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.
பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலைம் மற்றும் புதுச்சேரி எல்லைப் பகுதிகளில் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு வெளிமாநிலத்தவர் தீவிர பரிசோதனைக்கு பிறகே புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு நாள்தோறும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். தற்போது சுற்றுலாத் தலங்கள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் இன்றி புதுச்சேரி நகரம் வெறிச்சோடி காணப்படுகின்றது. இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநில முதலமைச்சர் நாராயணசாமி சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
கொரோனா வைரஸ் தொற்று தற்போது அதிகரித்து வருவதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாநில அரசு எடுத்து வருகிறது. இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை கடற்கரை சாலை முழுமையாக மூடப்படுவதாகவும், பாரத பிரதமர் அறிவுறுத்தல்படி நாளைய தினம் புதுச்சேரி மாநில மக்கள் தங்களின் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனஅவர் வலியுறுத்தினார்.
கொரோனாவின் தாக்கம் தற்போது இந்தியாவில் வேகமாக பரவுவது தெரிகிறது என்றார். தொடர்ந்து பேசிய அவர், திங்கட்கிழமை காலை முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ளாம் என்றும், அத்தியாவசிய பொருட்களின் கடைகள் வழக்கம் போல திறந்து இருக்கும் என்றார்.
மேலும் தமிழகத்தில் இருந்து அதிக அளவில் வாகனங்கள் புதுச்சேரிக்கு வருவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார் முதல்வர் நாராயணசாமி.
இந்த நிலையில், இரவு 8.30 மணியளவில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார் நாராயணசாமி, அப்போது, ஊரடங்கு உத்தரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.