நாளை முதல் புதுச்சேரி மாநிலத்தில் எதற்கெல்லாம் அனுமதி.. முதல்வர் நாராயணசாமி முக்கிய அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் நாளை (மே 4) முதல் தொழிற்சாலைகள், கடைகள் திறப்பதற்கு முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று (மே 3) மாலை நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, மல்லாடிகிருஷ்ணாராவ், ஷாஜகான், கமலக்கண்ணன், தலைமைச் செயலாளர் அஸ்வனிகுமார் மற்றும் அரசு செயலர்கள் கலந்து கொண்டனர்.
ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற கூட்டத்துக்கு பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மத்திய அரசானது ஏற்கனவே 3 ஆவது முறை ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தியதன் அடிப்படையில் மே 17 வரை ஊரடங்கு மாநிலம் முழுவதும் நடைமுறையில் இருக்கும். அதுபோல் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலம் என்று அறிவித்துள்ளது.
தொழில்கள், தொழிற்சாலைகள் எந்தெந்த பகுதியில் நடத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளனர். அதனடிப்படையில் புதுச்சேரி, மாஹே ஆரஞ்சு மண்டலமாகவும், காரைக்கால், ஏனாம் பச்சை மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு பகுதிகளில் கிராமப்புறத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் துவக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் தொழிற்சாலைகள் நடத்த எந்தவித அனுமதியும் தேவையில்லை.
அதேபோல் நகரப்பகுதியில் தொழிற்பேட்டை, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இல்லாத தொழிற்சாலைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளையும் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எந்தவித முன் அனுமதியும் இன்றி கடைகள், தொழிற்சாலைகளை திறக்கலாம். கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். தொழிற்சாலைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தலாம். இது நாளை (மே 4) முதல் அமலுக்கு வருகிறது. இங்கு வருவோர் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதுபோல் ஆரஞ்சு மண்டலத்தில் நான்கு சக்கர வாகனங்கள், டாக்சிகள் செல்ல அனுமதியில்லை. இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டும் பயணம் செய்யலாம். ஓட்டல்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கலாம். அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை. பார்சல் வாங்கிச் செல்ல மட்டுமே அனுமதியுண்டு. மதுக்கடை திறப்பது பற்றி அமைச்சரவையில் எந்தவித முடிவும் எடுக்கவில்லை. இருக்கின்ற சூழ்நிலை, மற்ற மாநிலங்களை பார்த்து பின்னர் முடிவு செய்வோம்.
கடைகள், தொழிற்சாலைகள் திறப்பதன் மூலம் மாநிலத்துக்கு வருவாய் பெருவதற்கான வாய்ப்புள்ளது. அரசு நிறுவனங்களில் 'ஏ', 'பி' பிரிவு ஊழியர்கள் நூறு சதவீதம் பணிக்கு வர வேண்டும். 'சி' பிரிவு ஊழியர்கள் 33 சதவீதம் பணிக்கு வரவேண்டும். தனியார் அலுவலகங்களில் 35 சதவீதம் பணிபுரிய வேண்டும்.
வெளிமாநிலங்களுக்கு புலம்பெயந்து சென்றவர்கள், வந்தவர்கள் அந்தந்த மாநிலங்களுக்கு செல்ல பதிவு செய்ய இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. அதில் 924 பேர் வருவதற்கும், 720 பேர் செல்வதற்கும் அனுமதி கேட்டு பதிவிட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து நம்முடைய மாநிலத்துக்கு வர புதுச்சேரி, மாஹே பகுதியில் இருந்து பலர் பதிவிட்டுள்ளனர். அவர்களை விமான சேவை தொடங்கிய பிறகுதான் கொண்டுவர முடியும்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளான அரியாங்குப்பம், முத்தியால்பேட்டை, ரெட்டியார்பாளையம், திருவாண்டார்கோவில், திருக்கனூர் ஆகிய 5 பகுதிகளில் எந்தவிதமான வியாபார நிறுவனங்களோ, தொழிற்சாலைகள் நடத்த அனுமதி கிடையாது. புதுச்சேரியில் 3 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆரோக்கியத்துடன் இருக்கின்றனர். மாநிலத்தில் 14 லட்சம் மக்கள் தொகையில் 13 லட்சத்துக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்ற முடிவு வந்துள்ளது.
மத்திய அரசு நம் மாநிலத்துக்கு நிதி வழங்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால் மத்திய அரசு இதுசம்மந்தமாக குழுவை கூட்டவில்லை என்று எனக்கு பதில் வந்துள்ளது. விரைவில் அந்த குழுக்கூடி மாநிலத்துக்கு தேவையான நிதியுதவியை கொடுக்கும் என்று நான் நினைக்கிறேன்" என நாராயணசாமி தெரிவித்தார்.