கைகளை சுத்தம் செய்யும் தானியங்கி கிருமி நாசினி இயந்திரம்.. புதுச்சேரி இளைஞர்கள் அசத்தல்
புதுச்சேரி: புதுச்சேரியில் பொறியில் பட்டதாரிகள் வடிவமைத்துள்ள கைகளை சுத்தம் செய்யும் தானியங்கி கிருமி நாசினி இயந்திரம், லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் போலீசார் மற்றும் புகார் அளிக்கும் வரும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களிலும், கிருமி நாசினி வைக்கப்பட்டு உள்ளது. மேலும், மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து காலால் இயக்கும் சானிட்டைசர் கருவியை வடிவமைத்து பல்வேறு அரசுத்துறைகளுக்கு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் பொறியியல் படிப்பு முடித்த மாணவர்கள் ஒன்றிணைந்து கைகளை சுத்தம் செய்யும் தானியங்கி கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளனர். இந்த தானியங்கி இயந்திரத்தை சபாநாயகர் சிவகொழுந்து லாஸ்பேட்டை காவல் நிலையத்துக்கு வழங்கி, அதனை அறிமுகம் செய்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது லாஸ்பேட்டை ஆய்வாளர் கிருஷ்ணன், உதவி ஆய்வாளர்கள் கீர்த்தி, ஜாஹிர் உசேன் மற்றும் இளைஞர்கள் உடனிருந்தனர்.

இந்த தானியங்கி கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரத்தை தயாரித்த இளைஞர் கிரிதரன் கூறுகையில், காய்ச்சல் அறிகுறி இல்லாமலேயே பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது. எனவே கிருமி நாசினி பயன்படுத்தும் முறைகளில் நவீனத்தை புகுத்தும் நோக்கில், நண்பர்கள் நாங்கள் ஒன்றாக சேர்ந்து தானியங்கி இயந்திரம் வடிவமைக்க முடிவு செய்து, இயந்திரத்தை வடிவமைத்துள்ளோம். சென்சார் மூலம் இது இயங்குகிறது.

இயந்திரத்தின் மீது கைகள் படாமலேயே பயன்படுத்துவதால், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவுதல் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. மிகவும் பாதுகாப்பானது. 12 லிட்டர் வரை கிருமி நாசினி நிரப்ப முடியும். ஒரு முறை 3 எம்.எல் முதல் 5 எம்.எல் வரை கிருமி நாசினி வழங்கும். இதனை வடிவமைக்க ரூ. 8,000 ஆயிரம் வரை செலவானது. புதுச்சேரியில் முதன்முறையாக சபாநாயகர் சிவகொழுந்து நாங்கள் உருவாக்கிய தானியங்கி இயந்திரத்தை வாங்கி லாஸ்பேட்டை காவல் நிலையத்துக்கு வழங்கியுள்ளார் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications