5 கி.மீ. பேரணி நடத்திய கல்லூரி மாணவிகள்.. பஸ் ஏற்றி பத்திரமாக அனுப்பி வைத்த பாசக்கார புதுவை போலீஸ்
புதுச்சேரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 5 கி.மீ பேரணியாக நடந்து வந்து சட்டப்பேரவை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்ட அரசு கல்லூரி மாணவிகளை, போராட்டம் முடிவடைந்ததும் காவல்துறைக்கு சொந்தமான பேருந்தில் ஏற்றிகொண்டு கல்லூரியிலேயே பத்திரமாக இறக்கி விட்டார்கள் பாசக்கார புதுச்சேரி போலீசார்.
அரசு கல்லூரி மற்றும் கூட்டுறவு கல்லூரிகளில் உள்ள கட்டண வேறுபாடுகளை கலைய வேண்டும், அரசு கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகளை உருவாக்க வேண்டும், புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் புதுவை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர் மாணவ மாணவிகள்.
இவர்கள் கதிர்காமம் பகுதியில் செயல்பட்டுவரும் இந்திராகாந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயில்பவரகள். இந்த கல்லூரியின் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து சட்டமன்றம் நோக்கி 5 கி.மீ நடந்தே பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக வந்த மாணவர்களை சட்டப்பேரவை அருகே போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். அதனை தொடர்ந்து மாணவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்நிலையில் 5 கி.மீ நடந்தே வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மிகுந்த சோர்வுடன் காணப்பட்டதால், அங்கிருந்த போலீசார் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு காவல்துறைக்கு சொந்தமான பேருந்தை வரவழைத்து, மாணவிகள் அனைவரையும் பேருந்தில் ஏற்றிகொண்டு கல்லூரியில் பத்திரமாக இறக்கிவிட்டனர். போலீசாரின் இந்த மனிதநேயம்மிக்க செயலுக்கு மாணவிகள் அனைவரும் புன்னகையுடன் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.