புதுச்சேரியை மிரட்டும் பன்றிக் காய்ச்சல்.. 15 பேர் பாதிப்பு.. சிலருக்கு வீட்டிலேயே சிகிச்சை!
புதுச்சேரி: புதுச்சேரியில் 15 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது, 8 பேர் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், 7 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் தொடர்ந்து வைரஸ் காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் 500 பேருக்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். கடந்த 9 நாட்களில் மட்டும் 4,812 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
புதுசேரி அரசு மருத்துவமனைகளில் 434 பேரும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் 36 பேரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதேபோல், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் உள்ள குழந்தைகள் வார்டில் 170 பேரும், காரைக்காலில் 18 குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதாரத்துறை கூறியுள்ளது.
தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பல மாவட்டங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அந்த மாவட்டங்களுக்கு புதுச்சேரியில் இருந்து சென்றுவிட்டு, மீண்டும் திரும்பி வந்தவர்கள் மூலம், புதுச்சேரியில் பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளதாக சுகாதாரத்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனிடையே, நேற்று முன்தினம் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 110 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சோதனைக்குப் பின்னர் நேற்று 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோல், நேற்று ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் 8 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது.
பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் அரசு மருத்துவமனைகளில் தலா ஒருவரும், தனியார் மருத்துவமனைகளில் 3 பேர் என 7 பேர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மீதமுள்ள 8 பேர், அவரவர் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடியாக தொடர்பில் இருந்தவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு, அவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.