கடலூரில் ஒரே நாளில் 107 பேருக்கு கொரோனா.. எல்லாருமே கோயம்பேடு போனவங்க
கடலூர்: கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு திரும்பி 107 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.
கோயம்பேடு சந்தையில் தொடர்புடைய பலருக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, கடலூர், விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு சென்று திரும்பிய சுமார் 300 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் பலருக்கு பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. கோயம்பேடு சந்தை மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறிவிட்டதோ? என்ற அச்சம் அனைவரிடமும் எழுந்துள்ளது.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்து வந்த நிலையில், தற்போது சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து வந்தவர்களால் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதில் முதலில் பாதிக்கப்பட்டவர்கள் நகரப்பகுதியை சேர்ந்தவர்களாக இருந்து வந்தனர். ஆனால், தற்போது கிராமப்புறங்களை சேர்ந்தவர்களே பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா ஏன்.. சுகாதாரத் துறை அதிர்ச்சி விளக்கம்
இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 107 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கோயம்பேடு சந்தைக்கு சென்று திரும்பியவர்கள். இதனால் கடலூர் மாவட்டத்தில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 129 இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கோயம்பேடு சந்தைக்கு சென்று திரும்பியவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 699 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரம் தனிமைப்படுத்தி, அந்த பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவும், அப்பகுதிக்குள் வெளிநபர்கள் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வெளி மாநிலங்களிலிருந்து அல்லது வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் குறித்து தகவலை கிராம நிர்வாக அலுவலர் அல்லது தாசில்தார், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறை எண் 1077 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வலியுறுத்தியுள்ளார்.