காரில் வந்து திருடும் கும்பல்.. கலங்கிப் போய்க் கிடக்கும் புதுவை.. என்ன செய்கிறது போலீஸ்!
Recommended Video

புதுச்சேரி: புதுச்சேரியில் காரில் வந்து திருடும் கும்பலால் மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். பட்டப் பகலில் நடைபெறும் இந்த திருட்டுக்களால் போலீஸாரும் திணறி வருகின்றனர்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் காவேரி நகரில் வசித்து வருபவர் வின்சென்ட் லூர்து நாதன். இவர் நகைக்கடை ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று மதியம் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் கடைக்கு சென்றுள்ளார்.

இரண்டு மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்த வின்சென்ட் லூர்து நாதன், வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 35 பவுன் தங்க நகை மற்றும் 70 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசாரிடம் வின்சென்ட் லூர்து நாதன் அளித்த புகாரின்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர்.

மேலும் அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், வின்சென்ட் லூர்து நாதன் வீட்டை விட்டு சென்றதும், அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் வின்சென்ட் லூர்து நாதனின் வீட்டிற்குள் சென்று வரும் காட்சிகள் கேமாராவில் பதிவாகியுள்ளது. எனவே காரில் வந்த மர்ம நபர்கள்தான் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அந்த காரின் நம்பரை வைத்து, அதன் உரிமையாளர் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டபகலில் பூட்டிய வீட்டில் காரில் வந்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தட்டாஞ்சாவடி பகுதியில் மருத்துவர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போதே உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 150 பவுன் தங்க நகை மற்றும் இரண்ரை லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். அதேபோல் கோரிமேடு பகுதியில் கொத்தனார் வீட்டில் 7 பவுன் நகை கொள்ளைடிக்கப்பட்டது.

தற்போது நகை கடை ஊழியர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நடந்து வரும் தொடர் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் போலீசார் இரவு நேரத்தில் மட்டும் ரோந்து செல்லாமல், 24 நேரமும் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications