யாரும் வீட்டில் உணவு சமைக்க வேண்டாம்.. விஷ வாயு கசிந்த பகுதியில் வீடு வீடாக உணவு வழங்கும் அரசு
புதுவை: புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் வீடுகளில் யாரும் உணவு சமைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள மக்களுக்கு வீடு வீடாக சென்று உணவு பார்சல்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் மாஸ்க்குகளும் வழங்கப்பட்டுள்ளது.
புதுவையின் ரெட்டியார் பாளையம் புதுநகர் பகுதியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியை சேர்ந்த மூதாட்டி செந்தாமரை (வயது 72) இன்று காலை வீட்டில் உள்ள டாய்லெட்டிற்கு சென்றபோது மயங்கி விழுந்தார். உடனே அவரது மகள் காமாட்சி (55), செந்தாமரையை தூக்கச் சென்றபோது அவரும் மயங்கி விழுந்தார்.

இதைப் பார்த்த பேத்தி பாக்கியலட்சுமி கழிப்பறைக்குச் சென்றபோது அவரும் மயங்கி விழுந்தார். இது குறித்த தகவல் உடனடியாக போலீசாருக்கு கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீ அணைப்புத்துறையினர் மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே செந்தாமாரை மற்றும் காமாட்சி உயிரிழந்தனர்.
இதற்கு மத்தியில் பக்கத்து வீட்டில் ஒரு பெண்ணும் விஷவாயு பரவியதில் வீட்டில் மயங்கி விழுந்தார். அந்த பெண்ணும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கழிப்பறையில் இருந்து விஷவாயு வெளியேறிதால் 3 பேரும் பலியானது காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அப்பகுதியில் காட்டுத்தீ போல இந்த தகவல் பரவியது. மேலும் அப்பகுதியில் விஷவாயு எதுவும் பரவுகிறதா என்பது குறித்து நகராட்சி ஊழியர்கள் ஆய்வு நடத்தினர்.
கழிவுநீர் வடிகாலில் இருந்து கசிந்த விஷவாயு வீடுகளில் உள்ள கழிவறை மூலமாக வெளியேறுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக வீட்டிலிருந்து வெளியேறுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், மருத்துவம் மற்றும் சுகாராதத்துறையினர் அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் விஷவாயு கசிகின்றதா என ஆய்வு நடத்தினர்.
இதற்கிடையே பாதாள சாக்கடையில் இருந்து நேரடியாக கழிவு நீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கழிவு நீர் வாய்க்கால் அமைத்ததில் குறைபாடு எனவும் புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் கூறினார். மேலும் பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் இருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதால் அந்த கிராம மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலையில், விஷவாயு தாக்கிய பகுதியில் வீடுகளில் உணவு சமைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடு வீடாக சென்று உணவு பார்சல்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் மாஸ்க்குகளும் வழங்கப்பட்டுள்ளது. புதுவையை உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. வீட்டின் கழிவறைகளுக்கு தவறாக இணைப்பு கொடுக்கப்பட்டது தொடர்பாகவும் விசாரணைக்கு முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications