புதுச்சேரியில் துணை ராணுவம்.. அறிவிக்கப்படாத அவசரநிலை.. மாஜி முதல்வர் நாராயணசாமி பகீர்!
புதுச்சேரி: புதுச்சேரியில் ராணுவத்தை இறக்கி அறிவிக்கப்படாத அவசரநிலை அமல் படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில், மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகளை கண்டித்து, மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் தொடர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டு, பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதனிடையே, பாதுகாப்பு காரணமாக புதுச்சேரிக்கு திடீரென துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது. பின்னர், போராட்டம் நடத்திய தொழிலாளர்களை, நள்ளிரவில் துணை ராணுவப்படையின் உதவியுடன் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரியில் ராணுவத்தை இறக்கி அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். நாராயணசாமி தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, கடந்த காங்கிரஸ் ஆட்சியில், மின்துறையை தனியார் மயமாக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்ட போதும் அதை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டதாக தெரிவித்தார்.
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி - ஊழியர்கள் 3-வது நாளாக ஸ்டிரைக்- கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்!
தனியார்மயமானால் ஆபத்து
மின்துறை தனியார் மையம் ஆக்கினால் பல கோடி ரூபாய் சொத்து தனியாரிடம் ஒப்படைக்கப்படும். மின்சார கட்டணம் உயர்த்துவதோடு விவசாயிகளுக்கு வழங்கப்படக்கூடிய இலவச மின்சார நிறுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு அபாயங்கள் உள்ளது. மின்துறை தனியார் மையம் என்பது கொள்கை முடிவு என்று துணைநிலை ஆளுநர் குறிப்பிடுகிறார். நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே கொள்கை முடிவு ஏற்கப்படும் ஒன்றாகும்.
கலந்து ஆலோசிக்கவில்லை
மின்துறை தனியார் மாயமாக்குவது சம்பந்தமாக அரசியல் கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் பொதுமக்களின் கருத்துக்களை கேட்காமல் டெண்டர் விடப்பட்டுள்ளது. மக்களுக்கான அரசு என்பது மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றவே தவிர, மக்களுக்கு எதிர்ப்பான திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அல்ல. மின்துறை தனியார் மையம் டெண்டரை நிறுத்தி வைத்து விட்டு, மக்களுடனும், அரசியல் கட்சிகளுடனும் கருத்துகளை கேட்டு முடிவு எடுக்க வேண்டும்.
அறிவிக்கப்படாத அவசர நிலை
தனியார் மயத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய மின்துறை ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என்று துணை நிலை ஆளுநர் எச்சரித்தார். மேலும், துணை ராணுவத்தை புதுச்சேரியில் இறக்கியும் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனத்தை புதுச்சேரி அரசு அமல்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் மக்கள் விரோத திட்டங்கள் திணிக்கப்படுகிறது. இதற்கு முதலமைச்சர் ரங்கசாமி துணை போகிறார்.
நீதிமன்றம் சொல்வோம்
மின்துறை தனியார் மையமாக்கினால் அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்ல கூட தயாராக உள்ளோம். பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக ஆர்எஸ்எஸ் வேஷம் போட்டுக்கொண்டு, அமைச்சர்கள் நடிக்கிறார்கள். காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு சிலை வைத்தது தான் ஆர்எஸ்எஸ் இயக்கம் என நாராயணசாமி குற்றம்சாட்டினார்.