அலையாய் அலைந்த ஆனந்த், ஆதவ்! நேரில் கேட்டும் மறுத்த ரங்கசாமி! புதுச்சேரியிலும் விஜய்க்கு சிக்கல்!
புதுச்சேரி: புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் நடத்தும் ரோடு ஷோவிற்கு ஆய்வு செய்து, காவல்துறையிடம் அனுமதி கேட்க வந்த ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்தும் அனுமதி வழங்க கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் ரோட் ஷோவுக்கு அனுமதியில்லை எனவும், வேண்டுமானாலும் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டால் தரப்படும் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் வருகின்ற 5-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதன் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்கும் ரோடு ஷோவிற்கு அனுமதி கேட்டு புதுச்சேரி தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கடந்த புதன்கிழமை புதுச்சேரி காவல்துறை தலைமையகத்தில் டிஜிபி இடம் மனு அளித்திருந்தனர்.
அதன்படி காலாப்பட்டு முதல் கன்னியகோயில் வரை நடைபெறும் ரோடு ஷோவில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உரையாற்ற உள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ரோடு ஷோ நடத்த மூன்று நாட்களே உள்ள நிலையில் இதுவரை புதுச்சேரி காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.

விஜய் ரோடு ஷோ
கரூர் சம்பவத்தை மேற்கோள்காட்டி அனுமதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா விஜய் பேசும் சாலைகளில் ஆய்வு செய்த அவர்கள் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணனை சந்தித்து அனுமதி கோரி காவல் நிலையம் வந்தனர். அப்போது எஸ்.பி இல்லாததால் தொடர்ந்து முதலமைச்சர் இல்லம் சென்ற அவர்கள் முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து காமராஜர் புத்தகத்தை பரிசாக வழங்கினர்.
தவெக அனுமதி விவகாரம்
தொடர்ந்து அவர்கள் விஜய் பேசும் கூட்டத்திற்கு அனுமதி கேட்டு கோரிக்க வைத்தனர். இந்நிலையில், கரூர் சம்பவத்துக்கு பிறகு புதுச்சேரியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நடத்தும் ரோடு ஷோவிற்கு அனுமதி இல்லையென்று சபாநாயகர் செல்வம் கூறியுள்ள நிலையில், வேண்டுமானாலும் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டால் தரப்படும் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சபாநாயகர் செல்வம்
இதுதொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்தும் ரோடு ஷோவிற்கு அனுமதி அளிப்பது சரியான முடிவல்ல. ஏனென்றால் கரூரில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.அதன் பிறகு புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்துவது ஏற்புடையதல்ல.
கரூர் சம்பவம் தாக்கம்
தமிழகத்தைப் போன்று புதுச்சேரியில் விரிந்த சாலைகள் இல்லை. அவர்கள் கேட்கப்படும் அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டம் கொண்டது. எனவே ரோடு ஷோவை தவிர்த்து ஏதாவது ஒரு இடத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்திக் கொள்ளலாம். ரோடு ஷோவிற்கு அனுமதிக்க மாட்டோம். ரோடு ஷோ குறித்து நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. தேவைப்பட்டால் உப்பளம் மைதானம் போன்ற இடங்களில் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம்" என்றார்.
விஜயின் ரோடு ஷோ
இந்த நிலையில் விஜயின் ரோடு ஷோ திட்டத்தை கைவிட்டு பொதுக்கூட்டத்தை நடத்தலாம் என தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் அங்கேயே தங்கி இருக்கும் நிலையில் ரோட் ஷோவை பொதுக்கூட்டமாக மாற்ற திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் குறைந்த கால இடைவெளியே இருப்பதால் இருக்கை உள்ளிட்ட வசதிகள் செய்து தர முடியாது என சொல்லப்படுகிறது. இதை அடுத்து விஜயின் புதுச்சேரி நிகழ்வு சற்று தள்ளிப் போகலாம் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications