ஆமா.. இப்பதான் தமிழிசையின் "தயவு" தேவை.. கரெக்ட்டாக டைம் பார்த்து கிரண் பேடியை தூக்கி அடித்த பாஜக!
தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு தந்துள்ளது பாஜக தலைமை
புதுச்சேரி: மறுபடியும் தமிழிசையின் ஞாபகம் பாஜகவுக்கு வந்துள்ளது.. புதுச்சேரி பாஜக மீதான களங்கத்தை துடைக்கவும், அதிருப்தியை நீக்கவும் தமிழிசையின் தயவும், ஆதரவும் பாஜகவுக்கு மீண்டும் தேவை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
கடந்த 5 வருடமாகவே புதுச்சேரியில் அமைதி இல்லை.. நாராயணசாமியும், கிரண் பேடியும் எலியும் பூனையுமாகவே இருந்தனர்.. "அதிகார மோதல்" என்றால் என்ன என்பதை புதுச்சேரியை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்ற ரீதியில்தான் இந்த 5 வருடங்கள் ஓடியது.
விஷயம் இதுதான், புதுச்சேரியில் தமிழ் பேச தெரியாத ஒருத்தர், மாநில துணைநிலை ஆளுநராக இருப்பதால் மக்கள் நல திட்டங்களை அவரால் ஒருங்கிணைக்க முடியவில்லை என்பது முதல்வரின் குற்றச்சாட்டு..
திட்டங்கள்
மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுத்து, ஒவ்வொரு நாளும் நெருக்கடியை உருவாக்கி, அம்மாநில மக்களுக்கான நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த விடாமல் முடக்கி வைத்தவர் கிரண்பேடி என்பதும் மற்றொரு குற்றச்சாட்டு.. சுருக்கமாக சொல்லப் போனால், மக்களின் விருப்பத்திற்கு மாறாக, போட்டி முதல்வராக அவரை செயல்பட வைத்துவிட்டது பாஜக தலைமை என்பதே பிரதானப்படுத்தப்பட்டு வந்தது.
காங்கிரஸ்
ஒருகட்டத்தில், காங்கிரஸ் கூட்டணி போராட்டம் நடத்திய, குடியரசு தலைவரிடம் புகார் கொடுக்கும் அளவுக்கு சென்றனர்.. இறுதியில், கிரண்பேடி நீக்கப்பட்டு தமிழிசைக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது... தமிழிசை பொறுப்புக்கு வந்ததைவிட, கிரண்பேடி பதவி பறிக்கப்பட்டதுதான், நாராயணசாமிக்கு இப்போதைக்கு உள்ள ஒரே சந்தோஷமான விஷயம்.. ஸ்வீட் கொடுத்து மகிழ்ச்சியில் திளைத்து வருகிறது காங்கிரஸ்.. அதேசமயம், தமிழிசையாவது, கிரண்பேடி போல இருக்கக்கூடாது என்ற ஆதங்கத்தையும் நாராயணசாமி வெளிப்படுத்தி உள்ளார்.
கிரண்பேடி
இந்த விவகாரத்தில், கிரண்பேடிக்கு பதிலாக எதற்காக தமிழிசையை நியமிக்க வேண்டும்? வேறு பாஜக தலைவர்கள் யாருமே தமிழ்நாட்டில் இல்லையா? எப்போதெல்லாம் பாஜகவுக்கு ஒரு நெருக்கடி வருகிறதோ அப்போதெல்லாம், சற்று அடக்கி வாசித்து பின்வாங்குவது இயல்பு.. பாஜகவுக்கு எப்போதுமே ஒரு முகமூடி தேவைப்படுகிறது... அந்த கட்சி தன் நிஜமுகத்தை என்றுமே நேராக காட்டியதில்லை... மக்களிடம் பிரபலமும், மரியாதையும் பெற்றவரை முன்னிறுத்தியே தங்களை காரியங்களை சாதித்து கொள்வதேயே வழக்கமாக வைத்துள்ளது.
உண்மை
அன்றைய மத்திய ஆட்சியில் வாஜ்பாய் என்ற வெள்ளை மனசு கொண்டவரின் முகத்தை மக்கள் முன்னாடி காட்டப்பட்டது என்றாலும், அவருக்கு பின்னே அத்வானி, முரளிமனோகர் ஜோஷியின் போன்றோரின் உண்மை முகங்கள் மறைந்திருந்ததே உண்மை... அன்று எப்படி வாஜ்பாய்க்கு ஒரு நிலைமை வந்ததோ, அப்படித்தான், தமிழ்நாட்டுக்கும் அன்று தமிழிசை தேவைப்பட்டார்.. பாஜக என்ற ஒரு கட்சியை அவ்வளவாக அறியாத தமிழகத்தில், அப்படி ஒரு பெயரையே மூலைமுடுக்கெல்லாம் கொண்டு போனவர் தமிழிசை.. தாமரை மலர்ந்தே தீரும் என்ற நெஞ்சுரம் கொண்ட தன் வார்த்தையை பாமர மக்கள் மனசிலும், பதிய வைத்தவர் தமிழிசை.
அணுகுமுறை
யாரையம் காயப்படுத்தாத பேச்சு, மென்மையான அணுகுமுறை, நாகரீக விமர்சனம் என தமிழிசியின் ஆளுமை ஒவ்வொன்றிலும் தெரிந்தது.. காரணம், குமரியார் மகள் நாகரீகத்தோடுதான் பேசுவார் என்று கலைஞரே அடிக்கடி சொல்லுவார்.. தமிழிசை வளர்ந்த விதம் அப்படி.. அதோடு சரி, பாஜக என்ற கட்சி ஓரளவு தமிழகத்தில் பிரபலமானதும், அடுத்து ஆட்சியை பிடிக்க ஒரு சில வேறு மாதிரியான அதிரடிகளும் தேவை என்பதால், தமிழிசை பதவி முடிந்ததும், வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டார்..
அதிருப்தி
இப்போது அப்படி ஒரு நெருக்கடிதான் புதுச்சேரியில் உள்ளது.. பாஜக இந்த 5 வருடத்தில் நிறைய அதிருப்தியை சம்பாதித்துள்ளது.. வரும் மே மாசம் தேர்தல் வரத்போகிறது.. இப்படியே போனால், புதுச்சேரியில் பாஜக தலைதூக்காது.. எனவே, மக்களின் மனசில் உள்ள அதிருப்தியை நீக்கவும், பாஜகவை ஓரளவு அந்த மாநிலத்தில் தழைத்தோங்க செய்யவும் தமிழிசையின் தயவு மீண்டும் தேவைப்பட்டுள்ளது.. தமிழிசை செளந்தர்ராஜனுக்கு கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி ஒதுக்கப்பட்டிருப்பது இந்த சமயத்தில் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.
துணை நிலை ஆளுநர்
நாராயணசாமியுடனான மோதல் இருப்பினும், தமிழிசை அதை நாசூக்காக கையாள்வார் என்றும், துணைநிலை ஆளுநருக்கு எதிராக முதல்வரும் அமைச்சர்களும் வீதியில் இறங்கி போராடும் அளவுக்கு இனி ஒருபோதும் அவல நிலை நடக்காது என்றும் நம்பப்படுகிறது.. அதிகாரம் படைத்தவர் என்ற நிலைப்பாட்டில் கிரண் பேடி உறுதி காட்டினாலும், அப்படிப்பட்ட கண்டிப்பும், பிடிவாதமும், அதிகாரமும் நிச்சயம் தமிழிசை செலுத்த மாட்டார்.. அந்த நம்பிக்கை பாஜக தலைமைக்கு அதிகமாகவே உள்ளது..
காங்கிரஸ்
தமிழிசையை காங்கிரஸ் எப்படி அணுக போகிறது என்பதும் எதிர்பார்ப்புதான்.. ஆட்சியை மாற்றுவதற்கும், கலைப்பதற்கும் முயற்சிகள் எடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.. அதாவது முக்கிய நபர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கலைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன..இப்போதே காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 11-ல் இருந்து 10ஆக குறைந்துவிட்டது.. ஆனால், பெரும்பான்மை 16 ஆக உள்ளது..
கவிழுமா? தப்புமா?
காங்கிரஸ் கூட்டணியை போலவே, எதிர்க்கட்சி என்ஆர் காங்கிரஸ் கூட்டணியும் சமநிலையில் இருப்பதால், நாராயணசாமி தலைமையிலான ஆட்சி தொடருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பெரும்பான்மை நிரூபிக்கப்படுமா? நாராயணசாமி ஆட்சி கவிழுமா? தப்புமா? என்பதெல்லாம் வேறு விஷயம் என்றாலும், தமிழிசை புதுச்சேரி மண்ணில் கால் வைத்த நேரம், இனியாவது 5 வருஷம் கழித்து அந்த மக்கள் மனசு அமைதி பெறும் என்றும், மாநிலம் வளர்ச்சியை நோக்கி நடைபோடும் என்றும் நம்பப்படுகிறது.