வேங்கைவயல் விவகாரம்.. "அடிச்சாலும் ஒத்துக்க கூடாது" குற்றஞ்சாட்டப்பட்டவரின் ஆடியோ, வீடியோ வைரல்!
புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக வீடியோ மற்றும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடிநீர் தொட்டியில் மனித் கழிவை கலக்கும் வீடியோ வெளியாகி இருக்கும் சூழலில், சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுதர்சன் தனது தாய் மற்றும் அத்தையுடன் பேசும் வீடியோவும் வெளியாகியுள்ளது.
2022ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து வேங்கைவயல் வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.

2 ஆண்டுகளுக்கு மேலாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஜனவரி 20ஆம் தேதியன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் காவலர் முரளிராஜா உட்பட சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வேங்கைவயல் இறையூர் கிராமங்கள் அடங்கிய முடுக்காடு பஞ்சாயத்து தலைவராக உள்ள பத்மா முத்தையா, குடிநீர் தொட்டி ஆப்ரேட்டர் சண்முகத்தை பணி நீக்கம் செய்திருக்கிறார்.
இதனால் பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் வகையில், குடிநீரில் நாற்றம் வருவதாக காவலர் முரளி ராஜா பொய் தகவலை பரப்பியதாகவும், அதன்பின் குடிநீர் தொட்டி மீது ஏறிய முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டதாகவும் கூறி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியது.
சிபிசிஐடி காவல்துறையின் குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஏற்கக் கூடாது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறி இருக்கிறார். அதேபோல் சிபிஐ விசாரணைக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று விசிக, சிபிஎம் மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் தந்தி தொலைக்காட்சி தரப்பில் குடிநீர் தொட்டியில் ஏறி மனித கழிவை கலக்கும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் குடிநீர் தொட்டியில் மனித கழிவை கலப்பதற்கு முன் சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் இருவரும் புகைப்படங்களை எடுத்து கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆடியோ ஒன்றும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள சுதர்சனின் தாய் மற்றும் அத்தை ஆகியோர் பேசிய ஆடியோ தான் வெளியாகியுள்ளது.
அந்த ஆடியோவில், போலீஸ் அடிச்சாலும் ஒத்துக் கொள்ள கூடாது என்று சுதர்சனின் தாய் சொல்ல, பின்னர் முரளியின் வேலைக்கு ஏதும் பிரச்சனை வந்துவிடுமோ என்ற பயத்தில் இருக்கிறார் என்று சுதர்சன் கூறுகிறார். தொடர்ந்து சுதர்சனின் அத்தை, நீங்கள் சொல்லாமனாலும் இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவில் இருப்பவர்கள் யார் என்பது சரியாக தெரியவில்லை. அதேபோல் சிபிசிஐடி போலீசாரின் விசாரணையின் போது, வேங்கைவயல் கிராம மக்கள் தரப்பில் கிராம மக்கள் மீதே பழி போட முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. இதனால் சுதர்சனை விசாரணைக்கு அழைத்து சென்ற போது, அவர் தனது தாய் மற்றும் அத்தையுடன் பேசிய உரையாடலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications