கட்சிப்பணிகளில் திடீர் பாய்ச்சல் காட்டும் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்! விறுவிறுப்பான விராலிமலை!
புதுக்கோட்டை: சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு ரெய்டு, உட்கட்சி பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் கட்சிப் பணிகளில் பெரியளவில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர், இப்போது திடீர் பாய்ச்சல் காட்டுகிறார்.
கோவையில் எப்படி நாம் தமிழர் கட்சியிலிருந்து கல்யாணசுந்தரத்தை அதிமுகவில் இணைத்து தனக்கான குரலாக எஸ்.பி.வேலுமணி ஒலிக்க வைத்து வருகிறரோ அதே பணியை விஜயபாஸ்கரும் கடைபிடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
நாம் தமிழர் கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த பேராவூரணி திலீபனை அதிமுகவிற்கு அழைத்து வந்ததில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முக்கிய பங்கு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

லைம் லைட்
அதிமுக ஆட்சிக்காலத்தில் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக பேட்டிகள் கொடுத்து ஊடக வெளிச்சத்தின் உச்சியில் இருந்தவர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். அதுவும் கொரோனா காலத்தில் சொல்லவே வேண்டாம், இவருடைய மாலை 6 மணி பிரஸ்மீட்டை பார்ப்பதற்காக மொத்த தமிழகமும் தொலைக்காட்சி முன்னால் காத்திருக்கும். அது ஒரு காலம் என்பது போல், இவை எல்லாம் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை தான்.

தேர்தல் முடிவு
சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு ரெய்டுகள், விசாரணைகள், உட்கட்சி லடாய் என பல்வேறு காரணங்களால் மனம் உடைந்து போன மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர், தான் உண்டு தன் சட்டமன்ற உறுப்பினர் பதவியுண்டு என்றிருந்து வந்தார். அதிலும் குறிப்பாக தனது தொகுதி மேம்பாட்டு நிதியை கூட வங்கியில் இருந்து எடுக்கமுடியாதபடி கணக்குகள் முடக்கப்பட்டதால் ஒரு கட்டத்தில் வெறுப்பான நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் பேசாமல் ஆளுங்கட்சி பக்கம் சென்றுவிடலாம் என்று கூட அவர் முயற்சித்ததாக கூறப்படுகிறது.

நீயா? நானா?
இதனிடையே அது கைகூடாததால் நீயா? நானா? என்று திமுகவை ஒரு கை பார்த்துவிடுவது என்ற மன நிலைக்கு வந்துவிட்ட அவர், ஆர்பாட்டம், போராட்டம் என முதல்வர் ஸ்டாலின் மீது பாயத் தொடங்கியிருக்கிறர். இவரது வேகத்தால் விராலிமலை தொகுதி அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் பழையபடி விறுவிறுப்பாக செயலாற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.

சுடச்சுட பதிலடி
இதனிடையே பேச்சாற்றல் மிக்க நாம் தமிழர் நிர்வாகி திலீபனை அதிமுகவுக்கு அழைத்து வந்ததில் முக்கிய பங்கு வகிக்கும் விஜயபாஸ்கர், ஊடகங்களில் குறிப்பாக யூடியூப்களில் தனக்கான குரலாக அவரை ஒலிக்க வைப்பார் எனத் தெரிகிறது. கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டுகளின் போதும் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் பேராசிரியர் கல்யாண சுந்தரம் பதிலடி தருவதை போல் விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு இனி சுடச்சுட பதிலடி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications