அடேங்கப்பா.. ரூ.15 கோடி வசூல்.. அசைவ உணவுடன் அசர வைத்த மொய்விருந்து.. புதுக்கோட்டையில் ருசிகரம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிழக்கு கிராமத்தில் நடந்த மொய்விருந்து விழாவில் ரூ.15 கோடி வசூலாகி உள்ளது. இதனால் மொய்விருந்து நடத்தியவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Recommended Video
தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் இன்னும் பாரம்பரியமான விருந்து நடைமுறை உள்ளது. மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் மொய் விருந்து நடைமுறை உள்ளது. இது மிகவும் பிரசித்த பெற்றதாகும். புதுக்கோட்டை, தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் ஆனி மாதம் தொடங்கி ஆவணி மாதம் வரையில் மொய்விருந்து விழாக்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
இது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மொய் விருந்து விழாக்கள் களையிழந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் மீண்டும் மொய்விருந்து மாஸாக நடைபெற்று வருகிறது.

அழைப்பிதழ்-அசைவ உணவு
இதற்காக முன்கூட்டியே அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கு வழங்கப்படும். அதன்பிறகு தடபுடலான ஏற்பாட்டுடன் குறித்த நாளில் மொய்விருந்து நடக்கும். இதில் அசைவ விருந்து வழங்கப்படும். ஒவ்வொரு மொய்விருந்தின்போதும் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்பார்கள் என்பதால் மொய் விருந்து நடக்கும் கிராமத்தில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

புதுக்கோட்டையில் மொய்விருந்து
இந்நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான மொய் விருந்து விழாக்கள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் தான் கடந்த இரு நாட்களுக்கு முன் நெடுவாசல் கிழக்கு கிராமத்தில் 31 பேர் இணைந்து பொது இடத்தில் மொய் விருந்து விழா நடத்தினர். இதில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர்.

ரூ.15 கோடி வசூல்
இதில் 31 பேருக்கும் சேர்த்து ஒரே நாளில் சுமார் ரூ.15 கோடி மொய் வசூலாகி உள்ளது. இதில் அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் ரூ.2.50 கோடி மொய் வசூல் ஆனது அனைவரின் புருவத்தையும் உயர வைத்துள்ளது. மேலும் அந்த விழாதாரர்களில் 20க்கும் மேற்பட்டோருக்கு தனிப்பட்ட முறையில் தலா 50 லட்சம் ரூபாய் வரையில் மொய் தொகை வசூல் ஆகியுள்ளது.

ஆன்லைன் பணப்பரிமாற்றம்
குறிப்பாக சிலர் போன்பே, கூகுள்பே மூலமும் மொய் செய்தனர். கட்டுக்கட்டாக பணம் மொய்யாக வந்ததால் அதனை சரியாக எண்ணும் வகையில் பணம் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மொத்தம் ரூ.15 கோடி மொய் வசூலாகி உள்ளதால் மொய் விருந்து விழாவை நடத்தியவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications