தங்கம் வாங்கிட்டு வான்னு அனுப்பினாரே.. ஜெயிச்சது தெரியாமலேயே.. காமன்வெல்த் அரங்கில் கதறிய வீராங்கனை!
புதுக்கோட்டை : காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற புதுக்கோட்டை வீராங்கனை லோகப்பிரியாவின் மகிழ்ச்சி சில நிமிடங்கள் கூட நீடிக்காத வகையில் அவருக்கு ஒரு அதிர்ச்சி செய்தி சொல்லப்பட்டது. அதைக் கேட்டு காமன்வெல்த் அரங்கிலேயே கதறி அழுதுள்ளார் லோகப்பிரியா.
கந்தர்வகோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த லோகப்பிரியா, நியூசிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில், 52 கிலோ எடைப் பிரிவில் 350 கிலோ தூக்கி தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
லோகப்பிரியா மெடலை அணிந்து கொண்டு தேசியக் கொடியோடு கீழே இறங்கியதும், பயிற்சியாளர் சொன்ன தகவல் அவரை அப்படியே நொறுங்கிப் போகச் செய்தது. லோகப்பிரியாவின் தந்தை காமன்வெல்த் போட்டியை பார்த்துக் கொண்டிருக்கும் போது மாரடைப்பால் மரணமடைந்து விட்ட தகவலைக் கேட்டு கதறி துடித்துள்ளார் லோகப்பிரியா.
தங்கம் வாங்கவேண்டும் எனக் கூறி அனுப்பி வைத்த தந்தை, தான் வெற்றி பெற்றதைக் பார்க்கக் கூட இல்லாமல் போய்விட்டாரே என அவர் கதறியது அனைவரையும் கலங்கச் செய்துள்ளது.
குஜராத் முதற்கட்ட தேர்தல்: 60.23 சதவீத ஓட்டுக்கள் பதிவு.. 2017-ஐ ஒப்பிட்டால் வாக்குப்பதிவு மந்தமாம்!
கிராமப்புற மாணவி
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லுக்காரன்பட்டியை சேர்ந்தவர் லோகப்பிரியா. இவரது தந்தை செல்வமுத்து, தாய் ரீட்டா மேரி. இவர்களது மூத்த மகளான லோகேஸ்வரி, பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்து வருகிறார். இவர், சிறு வயது முதலே பளுதூக்கும் போட்டியில் ஆர்வம் கொண்டிருந்தார். இந்நிலையில் லோகப்பிரியா மாவட்ட, மாநில அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார்.
தந்தை திடீர் மரணம்
தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்தார் லோகப்பிரியா. பளுதூக்கும் போட்டி நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற நிலையில், காமன்வெல்த் போட்டிகளை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த லோகப்பிரியாவின் தந்தை செல்வமுத்து நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் மாரடைப்பால் உயிரிழந்தார். தந்தை இறந்த செய்தியை லோகப்பிரியாவுக்கு தெரிவித்தால் அவர் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று எண்ணிய அவரது தாய் ரீட்டா மேரி தனது மகளுக்கு இந்த விஷயத்தை சொல்ல வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
சொல்ல வேண்டாம்
தந்தை இறந்தது தெரியாமலேயே பளுதூக்கும் போட்டியில் 52 கிலோ எடை பிரிவில், 350 கிலோ எடையை தூக்கி லோகப்பிரியா தங்கப்பதக்கம் வென்றார். அவர் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில், கழுத்தில் மெடலோடும், கையில் தேசியக் கொடியோடும் மேடையில் இருந்து இறங்கிய நிலையில், அவருக்கு அவரது தந்தை இறந்த செய்தி தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அதிர்ந்தார் லோகப்பிரியா. காமன்வெல்த்தில் தங்கப் பதக்கம் வென்ற மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்காமல், தந்தை இறந்த செய்தி லோகப்பிரியா தலையில் இடியாக இறங்கியது.
பார்க்காமலேயே போயிட்டாரே
தந்தை இறந்த தகவலைக் கேட்டதும் லோகப்பிரியா கதறி அழுதுள்ளார். காமன்வெல்த் போட்டியில் பிறந்த நாட்டிற்கும், பிறந்த ஊருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் தங்கம் வாங்கிவிட்டுத் திரும்ப வேண்டும் என வாழ்த்தி அனுப்பிய தந்தை, தான் தங்கப் பதக்கம் வாங்கியது கூட தெரியாமல் போய்விட்டாரே என லோகப்பிரியா கதறி அழுதது அங்கிருந்தவர்களை கலங்கச் செய்துள்ளது. அவரை சக வீரர்கள் ஆறுதல் கூறி அமைதிப்படுத்தினர்.
குடும்பத்தினர் கோரிக்கை
இந்நிலையில் நேற்று லோகப்பிரியாவின் சொந்த ஊரான கல்லுக்காரன் பட்டியில் அவரது தந்தை உடல் அடக்கம் செய்யப்பட்டது. லோகப்பிரியாவின் குடும்பம் தற்போது மிகுந்த வறுமையில் வாடி வருகிறது. லோகப்பிரியாவின் தாய், பொதுக் கழிவறையில் கட்டணம் வசூல் செய்யும் வேலை செய்கிறார். இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த தங்கமங்கை லோகப்பிரியாவின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள், அரசு வேலை, வீடு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அவரது குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.