கமல்ஹாசனின் ஆதரவு வாக்கு வங்கிக்கு வலுசேர்க்காது.. மநீம கட்சியை இப்படி சொல்லிவிட்டாரே திருமாவளவன்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆதரவு வாக்கு வங்கிக்கு வலுசேர்க்கும் என கருதவில்லை- திருமாவளவன்
புதுக்கோட்டை: கமல்ஹாசனின் ஆதரவு வாக்கு வங்கிக்கு வலு சேர்க்கும் என நான் கருதவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலினத்தவர்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டியில் யாரோ மனிதக் கழிவுகளை போட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

குற்றவாளிகள்
இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்பட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை விசிக தலைவர் தொல் திருமாவளவன் தொடங்கி வைத்தார்.

ரத்த அழுத்தம்
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து பேசிய திருமாவளவன் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராம நீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் நடைபெற்று 40 நாட்கள் ஆகிவிட்டன. இதுநாள் வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

சிபிசிஐடி போலீஸ்
அதன் காரணமாகத்தான் தமிழக அரசு சிபிசிஐடி போலீஸிடம் இந்த வழக்கை ஒப்படைத்தது. இருந்தாலும் சிபிசிஐடி போலீஸார் குற்றவாளியை கண்டுபிடிக்காதது வருத்தமளிக்கிறது. கூடிய விரைவில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு இந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் என்னவென தெரியவில்லை இன்னும் குற்றவாளிகள் இதுநாள் வரை கைது செய்யப்படவில்லை.

அதிகாரிகள்
பல நேரங்களில் அதிகாரிகள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்காததன் காரணமாகவே இது போன்ற வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில் தாமதம் ஏற்படுகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழ்நாடு முதல்வர் இந்த வழக்கில் தனி கவனம் செலுத்தி விரைந்து குற்றவாளியை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜாதி பாகுபாடு
முதல்வரை பொருத்தவரை அவர் ஜாதி பாகுபாடு பார்ப்பது கிடையாது. அனைவரையும் ஒருங்கிணைத்துதான் ஆட்சி நடத்தி வருகிறார். இது போன்ற சம்பவங்களில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் விமர்சனம் செய்திருப்போம். வேங்கைவயல் விவகாரத்தில் இதுவரை அதிமுகவும் பாஜகவும் குரல் கொடுக்காதது ஏன்? சீமான் என்னை பற்றி அரசியல் காரணங்களுக்காக விமர்சனம் செய்து வருகிறார். நான் ஜாதிய தலைவர் கிடையாது.

திமுக கூட்டணி வேட்பாளர்
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது வாக்கு வங்கிக்கு வலுசேர்க்கும் என நான் கருதவில்லை. ஆனால் பாஜகவுக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் ஓரணியில் இணைந்திருப்பதை நான் வரவேற்கிறேன் என திருமாவளவன் கூறியுள்ளார். திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளருக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு கூறியுள்ள நிலையில் அந்த தொகுதியில் மக்கள் நீதி மய்யத்திற்கு எந்த செல்வாக்கும் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளதாக திருமாவின் கருத்துகள் பார்க்கப்படுகின்றன.

முடிவுகள் எப்போது
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். கள நிலவரங்களை பார்த்தால் அவருக்குத்தான் வெற்றி வாய்ப்பு இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ், தேமுதிக, அமமுக, நாம் தமிழர், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இதன் வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் 2ஆம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் மதியத்திற்குள் யாருக்கு வெற்றி என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications