ஆபாச பேச்சு.. வீடியோக்கள்.. டிக்டாக் புகழ் ஜிபி முத்து, ரவுடி பேபி சூர்யா மீது போலீசில் புகார்
ராமநாதபுரம்: ஆபாசமாக பேசி வீடியோக்களை வெளியிட்டு கலாச்சாரத்தை சீரழிப்பதாக டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து மற்றும் ரவுடி பேபி சூர்யா உள்ளிட்ட 4 பேர் மீது இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது,
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜி.பி. முத்து. இவர் தனது ஊரில் பழைய கதவு, ஜன்னல் உள்ளிட்டவற்றை வாங்கி அதை பழுது நீக்கி விற்பனை செய்யும் மரக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர்.
இவர் மரக்கடையில் இருந்தபடி பொழுதுபோக்காக டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். டிக்டாக் அப்போது தான் மக்கள் மத்தியில் சென்று கொண்டிருந்த நேரம், திடீரென பல்வேறு பாடல்களை இன்டிமேட் செய்து இவர் வெளியிட்ட வீடியோ பெரிய அளவில் வைரலானது. ஜி.பி முத்து தமிழகம் முழுவதும் பிரபலம் ஆனார்.

சிக்கல்
இதனால் பொழுதுபோக்காக டிக் -டாக்கில் வீடியோ வெளியிட்டு வந்த ஜி.பி முத்து, டிக் டாக்கிலேயே தனது முழு நேரத்தையும் செலவிட ஆரம்பித்தார். இதனால் அவர் பல பிரச்சனைகளைச் சந்தித்தார். நிறைய நையாண்டிகளையும், கேலிக்கிண்டலுக்கும் ஆளனார். எனினும் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு இன்று பெரிய அளவில் பிரபலம் ஆகி உள்ளார்.

போலீசில் புகார்
ஜிபி முத்து வீடியோவில் பேசும் போது நெல்லை தமிழில் திட்டியபடியே இருப்பார். இந்த விவகாரம் தற்போது அவருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. யூடியூபர்கள் மீது அரசு தற்போது நடவடிக்கை எடுத்து வரும் சூழலில் ஜிபி முத்து மீதும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஜிபி முத்து ரவுடி பேபி சூர்யா
இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எம்.எம்.கே.முகைதீன் என்பவர் அனுப்பி உள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: சமீபகாலமாக வலைதளங்களில் ஆபாச வீடியோ பதிவுகள் அதிக அளவில் வலம் வருகிறது. தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளி கல்லூரிகள் திறக்காததால் மாணவர்கள் கல்வி கற்பதற்கு இணையத்தில் அதிக நேரம் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்திய பேஸ்புக் , ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அப்பாவி மாணவர்களை வழிகெடுத்து அவர்களை ஆபாச வலைதளங்களுக்கு அடிமையாக்கி பணம் சம்பாதிக்கும் நோக்கில் சிலர் 1,ஜிபி முத்து, 2. திருச்சி சாதனா, 3. பேபி சூர்யா, 4.சிக்சர் என்ற சிக்கந்தர் மேலும் பலர் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையில் பல்வேறு வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

ஆபாச பாவணைகள்
இந்த வீடியோக்களை லட்ச்சணக்கானோர் காண்கின்றனர். இவர்களின் உடல் பாவணைகளும் பேச்சுக்களும் தமிழ்நாட்டில் கலாச்சாரம் மற்றும் சமூக சீரழிவை ஏற்படுத்தும். குறிப்பாக இதை காணும் சிறுவர், சிறுமிகளின் மனதை பாதிப்படைய செய்யும் வகைல் ஆபாச பதிவுகள் உள்ளது. இளைய சமுதாயத்தை பாதிக்கும் இத்தகைய இணையதளங்களை கண்டறிந்து அவற்றை தடை செய்ய வேண்டும், மாணவர்கள் மத்தியில் விஷத்தை பரப்பும் கொடிய உள்ளம் கொண்ட ஆபாச பேர்வழிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து இதுபோன்ற பதிவுகள் மேலும் தொடராமல் பாதுகாக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு புகாரில் கூறியுள்ளார். இந்த புகாரை அவர் தமிழக முதலமைச்சசரின் தனிப்பிரிவுக்கும் அனுப்பி உள்ளார். இதனால் போலீசார் ஜிபி முத்து, ரவுடி பேபி சூர்யா உள்ளிட்ட 4 பேருக்கும் சிக்கல் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications